சென்னையில் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி வீடுபுகுந்து படுகொலை... டிரைவரே போட்டுத் தள்ளியது அம்பலம்!
சென்னை வில்லிவாக்கத்தில் இன்று காலை தெற்கு ரெயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவனை வீடு புகுந்து வெட்டிக் கொன்றது அவரது ஓட்டுநர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை : சென்னை வில்லிவாக்கத்தில் இன்று காலை தெற்கு ரெயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவனை வீடு புகுந்து மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்தக் கொலையின் பின்னணியில் புதியவனின் ஓட்டுநரும் அவருடைய நண்பர்களும் உள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னை ஐ.சி.எப். சிக்னல் அருகே உள்ள சென்னை பாட்டை சாலையில் வசித்து வந்தவர் ஜே.கே.புதியவன். ரெயில்வே தொழிற்சங்க வட்டாரத்தில் பிரபலமான இவர், ஏஐஓபிசி என்ற தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார். தெற்கு ரெயில்வேயில் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்து வந்த அவர் இன்று காலை வீட்டில் தனியாக இருந்தார்.
புதியவனின் மனைவி ரஞ்சிதாவும் ஐ.சி.எப்.பில் ரெயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரின் இரண்டு மகள்கள் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில் புதியவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

கொலையில் முடிந்த வாக்குவாதம்
இன்று காலை 9 மணியளவில் 4 பேர் புதியவனின் வீட்டிற்கு வந்துள்ளனர். 2 பேர் வீட்டு வாசலிலேயே நின்றுகொள்ள இருவர் மட்டும் புதியவனுடன் வீட்டிற்குள் பேசிக் கொண்டிருந்துள்ளனர். திடீரென இரண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்றவே தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் புதியவனை கழுத்து, தலை, தோல்பட்டை என்று அவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

தப்பியோடிய கொலைக்காரர்கள்
இதனையடுத்து காப்பாற்றுங்கள் என்று புதியவன் அலறியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்ட நிலையில் 4 பேரும் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

தொழிற்சங்க போட்டியால் நடந்த கொலையா?
உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட புதியவன் பரிதாபமாக உயிரிழந்தார். புதியவன் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என்று போலீசார் சந்தேகித்தனர். எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்திற்கு எதிரான ரயில்வே தொழிற்சங்கத்தை நடத்தி வந்ததால் கொலை பின்னணியில் இதுவும் ஒரு காரணமாக இருக்குமா என்று சந்தேகிக்கப்பட்டது.

டிரைவரே கொலை செய்துள்ளார்
புதியவன் வீட்டு பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளின் அடிப்படையில் கொலைகாரர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியவர்களில் புதியவனின் ஓட்டுநர் பாஸ்கரும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. எனவே பாஸ்கர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து புதியவனை கொன்றுள்ளார் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. எனினும் கொலைக்கான காரணம் தெரியவில்லை தப்பிச் சென்ற பாஸ்கரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications