இந்த பெண் துணை விமானி தான் வேணும்.. பைலட் அடம்: ஏர் இந்தியா விமானம் தாமதம்
சென்னை: சென்னையில் இருந்து மாலி கிளம்பிய ஏர் இந்தியா விமானம் 2 மணிநேரம் தாமதமாக கிளம்பிச் சென்றது. தனக்கு பிடித்த பெண் துணை விமானி வந்தால் தான் விமானத்தை எடுப்பேன் என விமானி பிரச்சனை செய்ததால் அந்த தாமதம் ஏற்பட்டது.
ஏர் இந்தியா விமானம் ஒன்று 110 பயணிகளுடன் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக மாலிக்கு புதன்கிழமை கிளம்பியது. காலை 7 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் விமானியின் அடத்தால் 2 மணிநேரம் தாமதமாக 9.13 மணிக்கு கிளம்பியது.
விமானத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள் எரிச்சல் அடைந்தனர். விமானத்தை இயக்க வேண்டிய விமானி தனக்கு பிடித்த பெண் சக விமானி வந்தால் மட்டுமே விமானத்தை எடுப்பேன் என்று அதிகாரிகளிடம் தெரிவித்து அடம் பிடித்தார். அதனால் தான் விமானம் தாமதமாக கிளம்பியது.
இதற்கிடையே தனக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டதாக தெரிவித்த விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து சம்பவத்தின் பின்னணி பற்றி தெரிந்தவர்கள் கூறுகையில்,
குறிப்பிட்ட பெண் விமானிக்காக விமானத்தை தாமதமாக்கிய விமானி தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது அவர் 6 மாத நோட்டீஸ் பீரியடில் உள்ளார்.
புதன்கிழமை சென்னையில் இருந்து கிளம்பும் விமானத்தில் தனக்கு பிடித்த பெண் துணை விமானியை நியமிக்குமாறு அவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அதிகாரிகள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். அந்த பெண் துணை விமானி டெல்லி விமானத்தில் செல்ல உள்ளதால் இந்த விமானத்திற்கு அனுப்பி வைக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு விமானியோ, பெண் விமானி வராவிட்டால் எனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி வேலைக்கு வரமாட்டேன் என மிரட்டினார். அப்படியும் அவரது கோரிக்கை ஏற்கப்படாததால் செவ்வாய்க்கிழமை அவர் பணிக்கு வரவில்லை என்றனர்.