ஏர்செல் சேவை பாதிப்பால் ஆம்புலன்ஸை அழைக்க முடியவில்லை... நாமக்கலில் முதியவர் பலி!
ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டதால் அவசர உதவி எண் 108ஐ அழைக்க முடியாமல் விபத்தில் சிக்கிய முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Recommended Video
நாமக்கல் : ஏர்செல் நிறுவன சேவைகள் பாதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸை அழைக்க முடியாமல் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவன டவர் சேவையை பயன்படுத்தும் ஏர்செல்லுக்கும், நிறுவனத்திற்கும் நிதி விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் செல்போன் டவர்களை அந்த நிறுவனம் முடக்கியதாக தெரிகிறது. இதனால் நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஏர்செல் நெட்வொர்க்கை பயன்படுத்துவோர் சேவை கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. ஏர்செல் வாடிக்கையாளர்கள் கோவை, புதுச்சேரியில் உள்ள ஏர்செல் ஷோரூம்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் வேறு நெட்வொர்க்கிற்கு மாற விண்ணப்பித்துள்ளதால் ஏர்செல் சர்வரும் முடங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கும் மாற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சாலையை கடக்க முயன்ற போது முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தை நேரில் பார்த்தவர் உடனடியாக ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் ஏர்செல் சேவை பாதிப்பால் அவருடைய எண்ணில் இருந்து 108 அவசர உதவி எண்ணை அழைக்க முடியவில்லை. இதனையடுத்து அருகில் இருந்தவர்களை தேடிப்பிடித்து அதன் பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸை அழைக்க முடியாததால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏர்செல் சேவை பாதிப்பால் ஆம்புலன்ஸை அழைக்க முடியாமல் போனதே உயிரிழப்புக்கு காரணம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர் குற்றம்சாட்டியுள்ளார்.