எல்லாமே இரட்டை இலைக்காகத்தான்.. விருப்பத்தை வெளிப்படுத்திய செங்கோட்டையன்
இரட்டை இலை சின்னத்தை மீட்கத்தான் இரு அணிகளின் இணைப்பை விரும்புகிறோம் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் ஓபிஎஸ் அணியுடன் இணைய விரும்புகிறோம் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்று எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர் என்றும் இரு அணிகளின் இணைப்புக் குறித்து பேசுவதற்காக குழு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறினார்.

பரஸ்பரம் இரு அணிகளுக்கு இடையே தகவல்களை பரிமாறி கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால், குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய செங்கோட்டையன், அணிகள் இணைப்பு குறித்து அமைச்சர்கள் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீட்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விரும்பமாக இருக்கிறது என்றும், இதற்கான பிரமாண பத்திரம் தயாரித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அம்மா அணி உள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். மேலும், இரு அணிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications