ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தமா? : கன்னையா
இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
கடும் அதிருப்தியில் உள்ள ரயில்வே தொழிலாளர்கள் ஏ.ஐ.ஆர்.எப். மற்றும் எஸ்.ஆர்.எம்.யூ தலைமையில் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.
36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய தங்களது ஆதரவை ரயில்வே தொழிலாளர்கள் அளித்துள்ளனர். இதை அறிந்த மத்திய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அசோக்குமார் மாத்தூர் தலைமையிலான 7 வது சம்பள குழுவை உடனே அமைத்தது.
இந்த சம்பள கமிஷன் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏ.ஐ.ஆர்.எப்.க்கு அழைப்பு விடுத்தது.
இதனால், வேலை நிறுத்த கோரிக்கை குறித்து விவாதிக்க கடந்த 7 ம் தேதி ஏ.ஐ.ஆர்.எப். தலைவர்களை ரயில்வே அமைச்சகம் அழைத்தது. இதில், எங்களது அமைப்பு, ஏ.ஐ.ஆர்.எப். தலைவர் புரோகித், பொதுச் செயலாளர் எஸ்.ஜி.மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டோம்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ராணுவத்திற்கு இணையாக ரயில்வே தொழிலாளர்களையும் புதிய ஓய்வூதிய(பென்சன்) திட்டத்திலிருந்து விலக்கி, அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் வெளியிடவும், வாரிசுகளுக்கு வேலை தரும் திட்டத்தில், வேலை வழங்கும் போது ஏற்கனவே உள்ள குடியிருப்பை வாரிசுகளுக்கு மாற்றி தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், டிராக் மெயிண்டர்களாக பெயர் மாற்றப்பட்டுள்ள, டிராக்மென்களில் 6 சதவீதத்துக்கு ரூ.2,800 கிரேடும், 12 சதவீதத்துக்கு ரூ.2,400 கிரேடும், 22 சதவீதத்துக்கு ரூ.1,900 கிரேடும் மற்றும் 60 சதவீதத்துக்கு ரு.1,800 கிரேடும் உடனே தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மற்ற கோரிக்கைகளில் அடிப்படை சம்பளத்தோடு டி.ஏ.வை இணைப்பது குறித்து, மத்திய அரசு விரைவில் பரிசீலிக்கும் என்றும், இதற்கான உடன்பாடு காண விரைவில் கூட்டுக் குழு ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வேலை நிறுத்த ரகசிய வாக்கெடுப்பிற்கு பிறகு மத்திய அரசு, 7 வது சம்பள கமிஷனை நியமித்ததுடன், டி.ஏ. கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வரும் 17 ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் ஏ.ஐ.ஆர்.எப். பொது மகா சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.