ஜெயலலிதாவின் கண் அசைவுக்கு பயந்தவர்கள் எல்லாம் இப்போது ரிலாக்ஸாக இருக்கிறார்கள்.. சசி கணவர் நடராஜன்!
ஜெயலலிதாவின் கண் அசைவுக்கு பயந்தவர்கள் எல்லாம் இப்போது ரிலாக்ஸாக உள்ளனர் என சசிகலாவின் கணவர் நடரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் கண் அசைவுக்கு பயந்தவர்கள் எல்லாம் இப்போது ரிலாக்ஸாக உள்ளனர் என சசிகலாவின் கணவர் நடரராஜன் தெரிவித்துள்ளார். அந்த மாதிரி அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கோலொச்ச தொடங்கிய சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக அதிகம் பேசாமல் இருந்துவந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின் அதிமுக தினகரன் வசமானது.
இதைத்தொடர்ந்து மீடியாக்களிடம் பேசாமல் இருந்து வந்தார் நடராஜன். இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நடராஜன் பிரத்யோக பேட்டி அளித்துள்ளார்.
ஏற்ற இறக்கங்கள் இருந்தன
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆறு மாதங்களாக ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்தன. இப்போது சரியான நிலையிலேயே அரசு சென்றுகொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
சுறுசுறுப்பு தேவை
மற்றவர்கள் பற்றி கவலைப்படாமல் அரசாங்கம் தன்னுடைய கடமையை செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். இன்னும் சற்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் ஒரே இடத்தில்..
அதாவது மாவட்ட ஆட்சியர் எல்லாம் கிட்டத்தட்ட 6 அல்லது 7 வருடங்களாக ஒரே இடத்தில் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை எல்லாம் மாற்ற வேண்டும் என நடராஜன் வலியுறுத்தினார்.
ஜெ.வின் அசைவுக்கு பயந்தவர்கள்..
நாம் ஒன்றும் ஜெயலலிதா அல்ல என்று கூறிய அவர், ஜெயலலிதாவின் கண் அசைவுக்கு பயந்து வேலை செய்தவர்கள் எல்லாரும் தற்போது சற்று ரிலாக்ஸாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதனை எல்லாம் வேகப்படுத்த ஒரு இடத்தில் ஆறு ஏழு வருடங்களாக இருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய அரசு ஆதரவு கரம்..
மத்திய அரசு மானியம் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டது. அப்படியிருக்க மாநில அரசு நிதி ஆதாரத்திற்குச் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது என்றும் நடராஜன் கூறினார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதன் மூலம், மாநிலத்தின் பொருளாதாரம் மேலும் குறைந்திருக்கிறது என்றும் நடராஜன் தெரிவித்தார். மேலும் மத்திய அரசும் அதற்கு ஆதரவு கரம் நீட்ட முன்வந்திருப்பதற்கான சில அறிகுறிகள் தெரிவதாகவும் சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார்.