வட மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்துச்சு டோய்!...
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் அனலில் தகித்துக் கொண்டிருந்த நிலையில் விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
சென்னை: தலைநகர் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் அனல் தகித்து கொண்டிருந்தாலும் வட தமிழகத்தில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து மக்களை குளிர்வித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்சமா 108 டிகிரி வெப்பம் பதிவாகி சென்னை மக்களின் முகத்தில் நெருப்பை அள்ளி வீசிய வெப்பக் காற்று வட மாவட்ட மக்களை இதமான வானிலையால் மகிழ்வித்துள்ளது. வங்கக்கடலில் இருந்து கடல்காற்று மேற்கை நோக்கி வீசியதால் வட மாவட்டங்களான விழுப்புரம் திருவண்ணாமலை, திண்டிவனத்தில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலையின் செங்கம், ஆரணி, உள்ளிட்ட பகுதிகளில் சுறைக்காற்றுடன் மழை பெய்தது. திருவண்ணாமலை நகரிலும் வேட்டவலம், கோனலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கோனலூரில் மரம் சாய்ந்ததால் விழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதே போன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும் ஆலங்கட்டி மழை பெய்து மக்களை குளிர்வித்ததது.
வறண்ட மாவட்டங்களான வேலூர், குடியாதத்தம் அரக்கோணம், ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் கோடை மழை மக்களை மகிழ்வித்திருக்கிறது. இந்நிலையில் பெங்களூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டதமிழகத்தின் வடமாவட்டங்களில் இன்று இரவு நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை மைய ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.