சசிகலா குடும்ப வலையில் தமிழக பா.ஜ.க தலைவர்கள்- நிர்வாகிகளை எச்சரித்த அமித் ஷா!
சசிகலா குடும்ப வலையில் சிக்கிய பாஜக தலைவர்கள் விவரத்தால் டெல்லி மேலிடம் அதிர்ந்து போயுள்ளதாம்.
சென்னை: தமிழக பா.ஜ.கவுக்குள் நடக்கும் கோஷ்டி சண்டைகளால் கொதிப்பில் இருக்கிறாராம் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. உள்ளாட்சியிலும் கட்சி படுதோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நீங்கள் எல்லாம் செயல்படுகிறீர்கள். உங்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளைப் பற்றியும் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன' என தமிழக தலைவர்களிடம அதிருப்தியை வெளிக்காட்டியிருக்கிறார் அமித்ஷா.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் படுதோல்வியால் மிகுந்த கவலையில் ஆழ்ந்திருக்கிறது பா.ஜ.க மேலிடம். இந்தத் தோல்விக்குக் காரணமே தமிழிசையின் செயல்பாடுகள்தான். அவரால்தான் நோட்டாவைக் காட்டிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டோம்' என டெல்லிக்குப் புகார் மேல் புகார் அனுப்பினார்கள் தமிழிசையின் எதிர்க்கோஷ்டியினர்.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக வந்தார் பா.ஜ.க மேலிடப் பிரதிநிதியான ராம்லால். அவரிடமும் எதிர்க்கோஷ்டிகள் புகார்களை வாசிக்க, இதற்குப் பதிலளித்தவர், தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று நீங்கள்தான் கூறினீர்கள். ஆனால், தமிழிசையோ, இந்தச் சூழலில் தேர்தலை எதிர்கொள்வது ஆரோக்கியமாக இருக்காது. நாம் போட்டியிட வேண்டாம்' என்றார். அவருக்குப் படுதோல்வி கிடைக்க வேண்டும் என்றுதான் நீங்கள் எல்லாம் செயல்பட்டீர்கள். பிரசாரக் களத்தில் வேட்பாளருடன் அவர் மட்டும்தான் சுற்றிக் கொண்டிருந்தார். புகார் கூறும் நீங்கள் எல்லாம் எங்கே சென்றீர்கள் என்றே தெரியவில்லை. தோல்விக்கு நீங்களும்தான் காரணம் எனக் கடுகடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

உள்ளாட்சியிலும் உள்ளடி?
இதன்பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரிடம் பேசிய தேசியத் தலைவர் அமித் ஷா, தமிழகத்தில் தலைவர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உங்கள் அனைவரின் செயல்பாடுகளும் இருக்கின்றன. தலைமை சரியில்லை என்பதைக் காட்டுவதற்காக உள்ளாட்சித் தேர்தலிலும் நமக்குப் படுதோல்வியை ஏற்படுத்தும் வேலைகள் நடக்கின்றன. உங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் எனக்குத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இனியும் கோஷ்டிகளை உருவாக்காமல் கட்சியை வளர்க்கும் வேலைகளைப் பாருங்கள் என எச்சரிக்கைவிடுத்திருக்கிறார்.

அமைச்சர்களுடன் தொடர்பு
அமித் ஷாவின் நேரடி எச்சரிக்கையை அந்தப் பிரமுகர் எதிர்பார்க்கவில்லை. டெல்லி மேலிடத்தில் தமிழிசையின் வலுவான செல்வாக்கை நினைத்துத்தான் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் எதிர்கோஷ்டியினர். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ஆளும்கட்சி அமைச்சர்களின் ஆதரவோடு சில பா.ஜ.க நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் பலவிதமான ஆதாயங்களை அடைந்து வருகின்றனர். இதுதவிர, சசிகலா குடும்பத்தின் பே ரோல்(Pay role) பட்டியலில் முக்கிய நிர்வாகிகள் சிலர் இருக்கின்றனர். இவர்களுக்கு யார் மூலமாக பணம் செல்கிறது என்ற விவரத்தையும் அமித் ஷாவிடம் அளித்திருக்கிறார் நிர்வாகி ஒருவர். அந்தக் குடும்பத்துக்கு எதிராகத்தான் நாம் இவ்வளவு காரியங்களைச் செய்கிறோம். அவர்களிடமே விலை போய்விட்டார்கள்' என்றெல்லாம் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அந்தப் பிரமுகர்.

டெல்லி ஒப்புதல்
கட்சிக்குள் நடக்கும் மோதல்கள் குறித்துப் பேசிய தமிழிசை, எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. ஆளும்கட்சிக்கு எதிராகப் பேசுவதற்குக் காரணமே, உள்ளாட்சியில் நமக்கு நல்ல வாக்குகள் கிடைக்கும் என்பதால்தான். அ.தி.மு.க அரசின் சீர்கேடுகளைப் பற்றி தினம்தோறும் பேசி வருகிறேன். என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அகில டெல்லி தலைமையின் ஒப்புதல் பெற்றுத்தான் செய்கிறேன். அவர்கள் என்னை நம்புகிறார்கள். என்னை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள் எனக் கொதித்தார். மற்ற தலைவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் உள்ளாட்சியில் கணிசமான வெற்றியைத் தேடித் தரும் பணியில் முனைப்பாக இருக்கிறார் தமிழிசை" என்றார் விரிவாக.

தமிழிசையை மாற்ற முயற்சி
உள்ளாட்சியிலும் தமிழிசை தலைமையில் கட்சி படுதோல்வியை சந்திக்கும். அதன்பிறகாவது மாநிலத் தலைமையில் மாற்றம் வரட்டும் என இப்போதே கட்சிக்குள் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர் எதிர்க்கோஷ்டியினர்.












Click it and Unblock the Notifications