காவிரி படுகையில் கெயில் குழாய் பாதை: கைவிடாவிட்டால் போராட்டம்- அன்புமணி
காவிரி படுகையில் கெயில் குழாய் பாதை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை: காவிரி படுகையில் கெயில் குழாய் பாதை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் தருமபுரி எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் மாவட்டம் மாதனத்திலிருந்து மேமாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய்ப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காகப் பழையபாளையம், அகரவட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி உள்ளிட்ட 17 ஊர்களில் 112 ஏக்கர் நிலங்களைத் தமிழக அரசு கையகப்படுத்தப்பட உள்ளது.
இதனால் அந்தப் பாதையில் உள்ள 30ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு உடனடியாக நிறுத்தாவிட்டால், மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.