நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது...சிபிஎஸ்இ மாணவர்களுக்கே அதிக பயன்: அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கோவை : நீட் தேர்வால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கே அதிக பயன் இருக்கும் என்றும் இது சமூக நீதிக்கு எதிரானது என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
எந்தத் துறையாக இருந்தாலும் அது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் பொது மேடையில் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மு.க.ஸ்டாலினை நான் தான் விவாதத்திற்கு அழைத்தேன், ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் அவரே என்னை விவாதத்திற்கு அழைத்தார்.
அதனை ஏற்று தான் பொதுவிவாதத்திற்கு ஏற்பாடு செய்தோம், ஆனால் அவர் விவாதத்தில் பங்கேற்கவில்லை.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது சமூக நீதிக்கு எதிரானது. இந்த முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் 98 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கே கிடைக்கும் நிலை உள்ளது.
அதிமுகவின் 3 அணிகளுமே கூட்டுக் கொள்ளையர்கள் தான். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் 3 மாவட்டங்கள் பயனடையும், தமிழக அரசு திவாலாகிவிட்டது, இனி அதனால் நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.