நீட் தேர்வால் வெளிமாநிலத்தவருக்கு பலன் எனில் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளை மூடிவிடலாம்- அன்புமணி
நீட் தேர்வால் வெளி மாநிலத்தவர்தான் பலனடைவர் எனில் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளை இழுத்து மூடிவிடலாம் என பாமக எம்.பி. அன்புமணி காட்டமாக கூறினார்.
விழுப்புரம்: நீட் தேர்வால் வெளி மாநிலத்தவர்தான் பலனடைவர் எனில் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளை இழுத்து மூடிவிடலாம் என்று தருமபுரி எம்.பி.யும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியான தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை பாமக நடத்தி வருகிறது.
மாநாட்டு மேடைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீட் ஏன்?
இந்த மாநாட்டில் எம்.பி. அன்புமணி ராமதாஸ் பேசுகையில் நீட் என்றால் தேசிய தகுதி காண் நுழைவு தேர்வு ஆகும். ஒரே தேர்வில் நுழைவு மற்றும் தகுதி தேர்வு என்பது சாத்தியமா? நுழைவு, தகுதி தேர்வுதான் முக்கியம் எனில் பிளஸ் 2 தேர்வு எதற்கு தேவை?

சமூக அநீதி
பொறியியல் படிப்புக்கும் இதர படிப்புகளுக்கும் நீட் வரப் போகிறது. நீட் என்பது சமூக அநீதி- ஏழைகளுக்கும் தமிழகத்துக்கும் எதிரானது. மத்திய அமைச்சராக இருந்தபோது நீட் கொண்டுவர முயற்சித்ததை கடுமையாக எதிர்த்தேன். மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நான் விலகிய பின்னர் உடனே நீட் கொண்டுவந்தனர்.

5 பேருக்கு மட்டுமே இடம்
நீட் தேர்வால் அரசு பள்ளிகளில் படித்த 5 பேருக்கு மட்டுமே இடம். தமிழகத்தில் 34,500 அரசு பள்ளிகள் இருக்கும் நிலையில் இதுதானா சமூக நீதி?. நீட்டால் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பு வாய்ப்பு கிடைக்காது. உயர் சிறப்பு மருத்துவ படிப்பு வாய்ப்புகளும் நீட்டால் பறிபோனது.

தமிழக மருத்துவ கல்லூரிகள்
வெளிமாநிலத்தவர் படிக்கவா தமிழக மருத்துவ கல்லூரிகள் இருக்கிறதா? இழுத்து மூடலாம். தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு குட்கா விற்கவே நேரமில்லை. முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் நீட்டுக்காக டெல்லிக்கு போகவில்லை. நீட் மசோதா 6 மாதமாக டெல்லியில் நிலுவையில் இருக்கிறது. தமிழகத்தின் மசோதாவுக்கு ஒப்புதல் பெற பாமக முயற்சித்தது.

இலவசம் கூடாது
ஆடு, மாடு, கோழி, பிரிட்ஜில் முதலீடு செய்யாமல் கல்வியில்தான் முதலீடு செய்ய வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்து ஒரே ஒரு குண்டூசி கூட இலவசமாக தராது. நீட் என்பது சமூக நீதிக்கு எதிரானது. எடப்பாடியிடம் நீட் என கேட்டால் கை நீட்டத்தான் தெரியும். ஜெ. சசிகலா காலில் விழுந்தவர்கள் இப்போது மோடியின் காலில் விழுந்துள்ளனர் என்றார் அவர்.
நீட் தேர்வு எனும் சமூக அநீதி தொடர்பான ஆவணப்படமும் அன்புமணி பேச்சின் போது ஒளிபரப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications