பீப் பாடல்: டிசம்பர் 19ல் அனிருத் நேரில் ஆஜராக கோவை போலீஸ் சம்மன்
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் டிசம்பர் 19ம் தேதி ஆஜராக கோவை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரனிடம் கோவை போலீசார் சம்மனை வழங்கினர். சிம்புவையும், அனிருத்தையும் விடாது கருப்பாய் விரட்டுகிறது பீப் பாடல் சர்ச்சை விரட்டி வருகிறது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. சிம்புவும், அனிருத்தும் கைதாகும் வரை விடமாட்டர்கள் போல அந்த அளவிற்கு மாதர் சங்கத்தினர் வெறுப்பின் உச்சத்தில் இருக்கின்றனர்.
அனிருத் இசையில் சிம்பு பாடியதாக ‘பீப் சாங்' என்ற பெயரில் ஆபாச பாடல் ஒன்று இணையதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகார் மனுவில், சிம்புவும், அனிருத்தும் இணைந்து பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. பெண்களை ஆபாசமாகவும் கேவலமாகவும் சித்தரித்து அந்த பாடலை பாடி உள்ளனர். பாடல் முழுவதிலும் ஆபாசமான வரிகள் இடம் பெற்று உள்ளன. பெண்களை அவமானப்படுத்தி பாடுவதும் பேசுவதும் சிம்புவின் பாடல் மற்றும் படங்களில் தொடர் நிகழ்வாக உள்ளது. ஆபாச பாடலை தடை செய்ய வேண்டும். சிம்பு- அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
கோவை போலீஸ் சம்மன்
இந்த புகார் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் தகவல் தொழில்நுட்ப மோசடி தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிம்பு, அனிருத் ஆகியோருக்கு நேற்று சம்மனும் அனுப்பினார்கள். சிம்புவும் அனிருத்தும் 19ம்தேதி ரேஸ்கோர்ஸ் போலீசில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தந்தையிடம் சம்மன்
சிம்புவிடம் சம்மன் கொடுக்க தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றபோது அங்கு அவர் இல்லை. கைதாகிவிடுவோம் என்ற அச்சத்தில் சிம்பு தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவரது தந்தை டி.ராஜேந்திரிடம் போலீசார் சம்மனை அளித்தனர்.
அனிருத் ஆஜராக சம்மன்
அனிருத் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இருவரும் ஊரில் இல்லாததால் அவர்கள் வீட்டில் பெற்றோர்களிடம் போலீசார் சம்மனை கொடுத்து விட்டு சென்றனர். அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரனிடம் கோவை போலீசார் சம்மனை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேரில் ஆஜராக உத்தரவு
அதில், சர்ச்சைக்குரிய பாடல் தொடர்பாக வரும் 19ம் தேதி மதியம் 12 மணிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். நேரில் வராதபட்சத்தில் தங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
வலுக்கும் போராட்டம்
இதனிடையே சேலம், தஞ்சை, விருதுநகர், கோவில்பட்டி உள்பட பல்வேறு ஊர்களில் சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளன. பெண்கள் சங்கத்தினர் போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.
துடைப்பத்தால் அடித்து
தேனியில் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிம்பு, அனிருத் உருவபொம்மைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அப்போது பெண்கள் சிலர் உருவபொம்மைகளை செருப்பு, துடைப்பம் கொண்டு அடித்தனர்.
உருவ பொம்மை எரிப்பு
இதேபோல் தஞ்சையிலும் உருவபொம்மைகளை மாதர் சங்கத்தினர் செருப்பால் அடித்து எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை எரிக்கவிடாமல் உருவபொம்மைகளை பறிமுதல் செய்தனர்.
சேலத்தில் கொதிப்பு
சேலத்தில் நடந்த போராட்டத்தில் பெண்கள் சிம்பு, அனிருத் படங்களை தீயிட்டு எரித்தார்கள். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எந்தெந்த பிரிவுகளில் வழக்கு
கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் மீது தகவல்தொழில்நுட்பம் மூலம் சமூகவலைதளங்களில் பெண்களுக்கு எதிரான கருத்து வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதற்கட்டமாக தகவல் தொழில்நுட்பம் மூலம் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான கருத்து வெளியிடுதல், தவறான வார்த்தைகளை பிரயோகித்தல் ஆகியவை கொண்ட இந்திய தண்டனை சட்டம் 67/1, 509, 4/6 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 19ம் தேதி சிம்பு நேரில் ஆஜராகவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் வாரண்ட் பெறப்பட்டு சிம்புவை போலீசார் கைது செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.