மீன்பிடித் தடைக் காலம் முடிந்தது... மீன் வரத்து அதிகம்.. மீனவர்கள் குஷி
தமிழகத்தில் கடந்த 61 நாட்களாக நீடித்த மீன்பிடித் தடைக் காலம் நீங்கியதையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 15 கடலோர மாவட்டங்களில் கடந்த 61 நாட்களாக இருந்த மீன்பிடித்தடைக் காலம் நேற்றோடு முடிந்தது.
இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 கடலோர மாவட்ட மீனவர்களும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
தடைக்காலம் முடிவடைந்ததால் ராமேஸ்வரம் உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மீனவர்கள் நேற்று பகலிலேயே ஆழ்கடலில் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.
இன்னும் ஒருசில நாட்களில் தமிழக கடலோர மீன் மார்கெட்டுகளுக்கு அதிக அளவில் கடல் மீன்கள் வந்து குவியும் என்பதால் மீன்களின் தற்போதைய விலையில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டு விலை குறைவு ஏற்படும் என்று தெரிவிக்கிறார்கள் மீன் வியாபாரிகள்.
தமிழகத்தில் தற்போது, நடைமுறையில் உள்ள மீன்பிடித் தடைக் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும், மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும், விசைப்படகுகளை பராமரிக்க ஒன்றரை லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்பது மீனவர்கள் கோரிக்கை.
ஆனால் மாநில அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்த தடைக்காலத்திலாவது மாநில அரசு இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் மீனவர்கள்.