சென்னையை விடாது துரத்தும் அனல் காற்று... மேலும் 2 நாட்கள் நீடிக்குமாம்!
அண்டை மாநிலங்களில் நிலவும் கடுமையான வெப்பத்தால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை : சென்னையில் அடுத்த இரண்டு நாட்களும் கோடை மழை கருணை காட்டாது என்பதால் அனல் காற்று வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே சென்னையில் ஒரு காட்டு காட்டி வரும் கோடை வெயில் ஒரே ஒரு நாள் மட்டும் கருணை காட்டி லேசான மழையை கண்ணுக்குக் காட்டிச் சென்றது. தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் சூறாவளிக் காற்று, ஆலங்கட்டி மழை, சாரல் மழை என குஷிப்படுத்தும் வானிலை சென்னை மக்களுக்கு மட்டும் பாராமுகத்தையே காட்டி வருகிறது.
சென்னையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே அநாயசமாக 100 டிகிரியைத் தாண்டி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. தார் சாலைகளில் தகிக்கும் கானல் நீரைக் கடந்து வரும் வாகன ஓட்டிகள் மீதும் அனலை கக்க மறக்கவில்லை கோடை வெப்பம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சதமடிக்கும் வெயில்
தமிழகத்தை பொருத்தவரை வெயில் இன்றும் 8 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்துள்ளது. சென்னையில் காலை நிலவரப்படி அதிகபட்சமாக 106 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிந்துள்ளது. தொடர்ந்து நெருப்பு நகரமாக இந்த கோடை வெயிலை அனுபவித்து வரும் திருத்தணி இன்றும் 111 ஃபாரன்ஹீட் வெப்பத்தை பதிவு செய்துள்ளது. இது தவிர வேலூர் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தையும், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை, கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் 100 டிகரி ஃபாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
அனல் காற்று வீசும்
இந்நிலையில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் இன்னும் 2 நாட்கள் அனல் காற்று வீசும் என்றும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் காற்று தாமதமாகவே வருவதால் மாலை நேரங்களில் மட்டும் வெப்பத்தின் சூடு சற்று தணிய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
உஷார்
ஆந்திராவில் நிலவி வரும் தீவிர வெப்பநிலை மற்றும் பிற மாநிலங்களில் அனல் காற்றின் திசை நகர்வு உள்ளிட்ட காரணங்களால் சட்டீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பம் வெளுத்துக் கட்டும் என்கிறது வானிலை ஆய்வு மையம். சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாகவும், அனல் காற்றின் தாக்கம் வழக்கத்தை விட கூடுதலாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் முடக்கம்
அனல் காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உடல்சோர்வு காரணமாக மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது தேவையான முன்ஏற்பாடுகளுடன வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.