5 நாட்கள்தான் விசாரணை.. அப்புறம் தீர்ப்பு.. தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
சென்னை: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், ஜூலை 23ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் என்று ஹைகோர்ட் 3வது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
3வது நீதிபதி
உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று தீர்ப்பு வழங்கினார். நீதிபதி சுந்தர், சபாநாயகர் முடிவு ஒருதலைபட்சமானது என்பதால் அவர் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார். எனவே இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3வது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணை நடந்தது.
நீதிபதி கேள்வி
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அப்போது, "இந்த வழக்கில் காலக்கெடு ஏதேனும் உருவாக்க வேண்டுமா என்றும், விசாரணையை இப்போதே துவங்க நீங்கள் ஆயத்தமாக உள்ளீர்களா" என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு, நாங்கள் வாதத்தை முன் வைக்க தயாராக உள்ளோம் என ராமன் தெரிவித்தார்.
கூடுதல் ஆவணங்கள்
இதையடுத்து, வழக்கு தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்த ஆவணங்களே போதுமா, இன்னும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளீர்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ராமன், இன்னும் ஒரு சில ஆவணங்களை கூடுதலாக தாக்கல் செய்ய உள்ளோம் என கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
5 நாட்கள் தொடர்ந்து விசாரணை
23ம் தேதி முதல் 27ம் தேதிவரை தினசரி வழக்கை விசாரிக்க உள்ளதாகவும், அதன்பிறகு தீர்ப்பு வழங்க உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். 5 நாட்கள் வழக்கு விசாரணைக்கு பிறகு, தீர்ப்பு ஏதாவது ஒரு நாளில் வழங்கப்படும். எனவே ஆகஸ்ட் மாதம் வாக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. 5 நாட்களுக்கு முன்பாகவே விசாரணை நிறைவடையவும் வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள் சட்டத்துறை வல்லுநர்கள். அப்படி நிறைவடைந்தால் இம்மாத இறுதிக்குள்ளாக கூட தீர்ப்பு வெளியாகலாம்.