ஹலோ போலீஸ் கண்ட்ரோல் ரூமா?... சென்ட்ரல்ல குண்டு வெடிக்கும்… மிரட்டிய 2 குடிகாரர்கள் கைது
சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும் மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. போனில் பேசிய மர்ம நபர், ‘சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லிக்கு செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடிக்கும். முடிந்தால் குண்டை கண்டுபிடியுங்கள்' என்று பேசிவிட்டு இணைப்பை துண்டித்தான்.
இதையடுத்து, பரபரப்படைந்த போலீசார், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், அதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
பதற்றத்தை தவிர்க்கும் விதமாக, ரயிலில் பழுதுயிருப்பது போல் காண்பித்து பிளாட்பாரத்தில் நின்றிருந்த தமிழ்நாடு விரைவு ரயிலை பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஒவ்வொரு பெட்டியையும் சோதனையிட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. சோதனைக்காக ரயில் கொண்டு செல்லப்பட்டது ஏறத்தாழ இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு பயணிகளை ஏற்றி கொண்டு ரயில் புறப்பட்டு சென்றது.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக, முரளிகுமார்(28), ரசூலா(23) என்ற போதை ஆசாமிகளை திரு.வி.க. நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ரசூலாவின் செல்போனை எடுத்து, முரளிகுமார் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஞாயிறன்று இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.