மோடிக்கு முன் முதல் ஆளாக கோபாலபுரத்தில் முகாமிட்ட தமிழிசை!
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி பிற்பகலில் செல்ல உள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கோபாலபுரம் வந்துள்ளார்.
Recommended Video
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி கோபாலபுரம் வருவதையொட்டி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்கூட்டியே அங்கு வந்திருந்தார்.
பிரதமராக நரேந்திர மோடி பங்கேற்றது முதல் இது வரை திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவில்லை. தமிழக அரசியல் மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து பிரதமரிடம் நேரில் முறையிட சென்ற செயல்தலைவர் ஸ்டாலினுக்கும் கூட பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. இந்நிலையில் தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார்.
பிரதமர் வருகையில் இந்த சந்திப்பு திடீரென சேர்க்கப்பட்டது. பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதரராவ் இந்தத் தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பிரதமரின் வருகையையொட்டி கோபாலபுரம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியுடனான சந்திப்பையொட்டி சென்னை கோபாலபுரம் இல்லத்தில் எம்பி கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோர் இருந்தனர். இதே போன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் தன்னுடைய தொண்டர்படையுடன் கோபாலபுரம் இல்லத்தில் முன்கூட்டியே முகாமிட்டிருந்தார்.