பூமி பக்கம் வேகமாக வந்து போன ராட்சச விண்கல்.. நல்லவேளை தப்பிச்சோம்!
சென்னை: விண்வெளியில் இருந்து ஒரு ராட்சச விண்கல், பூமிக்கு மிக அருகே வந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளியில் பல்வேறு அளவிலான ஏராளமான விண்கற்கள் உள்ளன. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் இவை விண்வெளியில் மிதந்த நிலையில் காணப்படுகின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் வந்து விழுகின்றன.

இவ்வாறு விழுவதில் பெரும்பாலானவை பூமிக்கு வரும் முன்பே எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில விண்கற்கள் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு ரஷ்யாவில் விழுந்தது. 20 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த விண்கல் வெடித்து சிதறியதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நடந்து முடிந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், மீண்டும் பூமிக்கு மிக அருகில் ஒரு ராட்சச விண்கல் வந்து சென்றுள்ளது. மணிக்கு சுமார் 43,000 கிலோமீட்டர் தூர வேகத்தில் பூமியை நோக்கி வந்த இந்த விண்கல்லின் சுற்றளவு 270 மீட்டர் ஆகும்.
பூமிக்கு சுமார் 10.6 லட்சம் மைலுக்கு அருகே வந்த இந்த விண்கல், பூமி மீது மோதியிருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடுமென தெரிவிக்கபட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த ஆய்வாளர் ஒருவர், "இத்தகைய ஆபத்து நிறைந்த விண்கற்களை நாங்கள் முன்கூட்டியே கண்டறிய முயல்கிறோம். ஆனால், சில சமயங்களில் அந்த கற்கள் பூமிக்கு மிக அருகே வந்த பிறகு தான் அதனை நாங்கள் கண்டறிய முடிகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications