கூட்டணித் தலைவர்களின் பெயர்களை சொல்ல ஆரம்பித்திருக்கும் ஜெயலலிதா!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது பிரசாரக் கூட்டங்களில் கூட்டணித் தலைவர்களின் பெயர்களை பெரும்பாலும் உச்சரிப்பதைத் தவிர்க்கும் முதல்வர் ஜெயலலிதா இப்போதெல்லாம் பெயர்களைச் சொல்லிப் பேச ஆரம்பித்துள்ளார்.

தமிழகம் முழுக்க அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றார்

கரூர் தொகுதி வேட்பாளர் தம்பிதுரையை ஆதரி்த்து கரூரில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகின்றார் என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய கரூர் அருகே உள்ள ராயனூரில் பிரச்சார மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கப்பட்டது. சினிமா சூட்டிங்கே மிஞ்சும் அளவு செட் அமைக்கப்பட்டது.

கரூர் தொகுதியில், கரூர் , அரவக்குறிச்சி, கிருஷ்ணராயுபரம், வேடந்தூர், விராலிமலை , மணப்பாறை என மொத்தம் 6 சட்ட மன்ற தொகுதிகள் வருகின்றது. ஆனால் 6 சட்ட மன்ற தொகுதிகளும், கரூர் , திருச்சி, திண்டுக்கல் , புதுக்கோட்டை என 4 மாவட்டங்களில் வருவதால், இந்த 4 மாவட்டத்திலும் இருந்தும், கட்சி தொண்டர்களையும், பொது மக்களையும் பிரச்சார மேடை முன்பு கொண்டு குவித்தனர்.

மேலும், தமிழக போக்குவரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருப்பதால், தனியார் பேருந்துகள், கார், வேன் என பல்வேறு வாகனங்களில் பொது மக்களை கொண்டு வந்து குவித்துவிட்டனர்.

தலைவர்களுக்கு மரியாதை

தலைவர்களுக்கு மரியாதை

மேடையில் போடப்பட்டிருந்த மைக் முன்பு வந்து, கூட்டணி கட்சி தலைவர்களான ஜான் பாண்டியன், பெஸ்ட் ராமசாமி, முருகேசன், தனியரசு என அவர்களை பெயர்களை உச்சரித்து மரியாதை கொடுத்தார்.

சரவெடிப் பேச்சு

சரவெடிப் பேச்சு

அடுத்து, மைக் பிடித்த முதல்வர் ஜெயலலிதா யாரும் எதிர்பாரத வகையில் அதிரடி சரவெடியாக முழங்கினார். அவரது பேச்சில்,தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையாக விளங்குவது காவிரி நதிநீர்ப் பிரச்சினை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், காவிரி பிரச்சினையைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பாஜகவுக்குக் கண்டனம்

பாஜகவுக்குக் கண்டனம்

1998-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சியுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து, மத்திய கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெற்றது. அப்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை வரப் பெறவில்லை. இடைக்கால ஆணை தான் அமலில் இருந்தது. அந்த இடைக்கால ஆணையை செயல்படுத்த அதிகாரிகள் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த அமைப்பிற்கு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை செயல்படுத்துகின்ற அதிகாரம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள அணைகளை இயக்கும் அதிகாரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்றும் நான் கோரிக்கை வைத்தேன்.

வாஜ்பாயை எதிர்த்தேன்

வாஜ்பாயை எதிர்த்தேன்

அதை செய்வதற்குப் பதிலாக அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய், இந்திய பிரதமரை தலைவராகவும், சம்பந்தப்பட்ட நான்கு மாநில முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட காவிரி நதிநீர் ஆணையத்தை அமைத்தார். இதனை, அப்போதே நான் எதிர்த்தேன். இப்படிப்பட்ட ஓர் ஆணையத்தால் எந்தப் பயனும் இருக்காது என்று உணர்ந்ததால் தான் அதை நான் கடுமையாக எதிர்த்தேன்.

பாஜசக அரசு அனுமதி மறுத்ததால்

பாஜசக அரசு அனுமதி மறுத்ததால்

அதிகாரம் படைத்த அதிகாரிகள் குழுவை மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைக்க மறுத்ததால் தான், இனி அந்த அரசால் தமிழ்நாட்டிற்கு எந்த நீதியும் கிடைக்காது என்பதால் தான், பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொண்டதோடு, அந்த பாஜக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் 1999-ஆம் ஆண்டு நான் திரும்பப் பெற்றேன்.

கருணாநிதியை அணுகிய பாஜக

கருணாநிதியை அணுகிய பாஜக

அப்போது, தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. அந்தத் தருணத்தில் பாரதிய ஜனதா கட்சி கருணாநிதியை அணுகி காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பதற்கான ஒப்புதலைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்த தி.மு.க. மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது. நான் தெரிவித்தது போலவே காவிரி நதிநீர் ஆணையத்தால் தமிழ்நாட்டிற்கு நீதி வழங்கப்படவே இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை செயல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் காவிரி நதிநீர் ஆணையத்தால் மேற்கொள்ள இயலவில்லை. அந்த அமைப்பால் தமிழகத்திற்கு எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை.

கர்நாடகத்தில் பாஜக இருப்பதால்

கர்நாடகத்தில் பாஜக இருப்பதால்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும், ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு சம அளவிலேயே உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் கட்சியாலும், பாரதிய ஜனதா கட்சியாலும் ஆட்சி அமைக்கவே முடியாது. தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. தமிழ் நாட்டில் எந்தக் காலத்திலும் பாஜகவாலும் ஆட்சி அமைக்க முடியாது.

தமிழர்களை வஞ்சிக்கும் பாஜக

தமிழர்களை வஞ்சிக்கும் பாஜக

எனவே தான், மத்தியிலே பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தாலும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் இரு கட்சிகளிடையே வேறு எந்தப் பிரச்சினைகளில் மாறுபாடு இருந்தாலும், வேறு எது எப்படி இருந்தாலும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையை பொறுத்தவரை பாஜகவும், காங்கிரசும் ஒரே விதமான கொள்கையைத் தான் கடைபிடித்து வருகின்றன. தமிழ்நாட்டை, தமிழக மக்களை இரு கட்சிகளுமே வஞ்சித்து வருகின்றன.

ஒரு சொட்டு தண்ணீர் கூட தராது பாஜக

ஒரு சொட்டு தண்ணீர் கூட தராது பாஜக

அதை போலவே, கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், வேறு எதில் அவை மாறுபட்டு இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட திறந்து விடக் கூடாது என்பதில் இரு கட்சிகளுமே உறுதியாக உள்ளன, தீவிரமாக செயல்படுகின்றன.

பாஜகவுக்கு ஓட்டுப் போடாதீங்க

பாஜகவுக்கு ஓட்டுப் போடாதீங்க

எனவே, காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது. பாஜகவுக்கும் வாக்களிக்கக் கூடாது.

செய்வீர்களா...

செய்வீர்களா...

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களையும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களையும், இந்தத் தேர்தலில் அவர்கள் போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

காவிரி குறித்து வாயே திறக்காத பாஜக

காவிரி குறித்து வாயே திறக்காத பாஜக

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் காவிரி நதிநீர்ப் பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் இதைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. பாஜக தலைவர்கள் தமிழகத்திற்குரிய காவிரி நீரை திறந்து விடுவதாக சொன்னாலே, கர்நாடக மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது. தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விடுகிறோம் என்று பாஜக சொன்னாலே கர்நாடகத்தில் இந்த மக்களவை தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. எனவே, இதைப் பற்றி பாரதிய ஜனதா கட்சியினர் எதுவுமே பேச மாட்டார்கள்.

வஞ்சிக்கப்பட்டதே அனுபவம்

வஞ்சிக்கப்பட்டதே அனுபவம்

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள வைகோ, ராமதாஸ் மற்றும் இதர கட்சியினர் நமக்குரிய காவிரி நதிநீரை பெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து என்ன உத்தரவாதத்தினை பெற்றுள்ளனர்? அவர்கள் தமிழக மக்களுக்கு அதனை தெரிவிக்க வேண்டும். நமக்குரிய காவிரி தண்ணீரை அளிக்காமல், நம்மை ஏமாற்றியது தான் கடந்த கால வரலாறு. நமக்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல் நம்மை வஞ்சித்தது தான் கடந்த கால அனுபவம்.

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளவர்களால் லாபம் இல்லை

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளவர்களால் லாபம் இல்லை

எனவே, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளால் நமது ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் எந்தத் தீர்வையும் காண முடியாது. அவர்களால், நமக்குரிய காவிரி தண்ணீரை பெறவே இயலாது. இது அவர்களுக்கும் தெரியும். அப்படியானால், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் நமக்குரிய காவிரி நதிநீர் கிடைக்காவிட்டாலும் கவலை இல்லை என்று முடிவு செய்துவிட்டார்களா? இதைவிட பெரிய துரோகம் வேறு என்ன இருக்க முடியும்? இதைவிட பெரிய துரோகம் இருக்க முடியுமா?

தொடர்ந்து துரோகம்

தொடர்ந்து துரோகம்

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ், தி.மு.க., பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வரும் மக்களவை பொதுத் தேர்தலில் நீங்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

இந்த தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடதுசாரிகளுடன் அதிமுக நெருக்கம் காட்டியது. ராஜ்யசபா தேர்தல்களில் இடதுசாரிகளை அதிமுக ஆதரித்தது. அதன் பின்பு பாஜக தனியே ஒரு கூட்டணி அமைக்க பெரும் போராட்டம் நடத்தியது. இடதுசாரிகளோ அதிமுக அணியில் இடம்பெற்றனர். ஆனால் திடீரென இடதுசாரிகளை விரட்டியடித்தது அதிமுக. இடதுசாரிகளை அதிமுக விரட்டிவிட்டதே, தேர்தலுக்குப் பின்பு பாஜக அரசுக்கு ஆதரவளிக்கத் தான் என்று பரபரப்பு தகவல் வெளியானது.

ஜெயலலிதாவின் மறைமுகத் திட்டம்

ஜெயலலிதாவின் மறைமுகத் திட்டம்

இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஒருமுறை கூட பாஜகவை முதல்வர் ஜெயலலிதா விமர்சிக்கவே இல்லை. தேர்தல் முடிவுகள் வெளியானபின் பா.ஜ.க.வுக்கு மாநிலக் கட்சி ஒன்றின் ஆதரவு தேவைப்படலாம். அப்போது கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகளை வைத்திருந்தால், பா.ஜ.க.-வுக்கு அதிமுக வெளிப்படையாக ஆதரவு அளிக்க முடியாது. அதை பாஜகவும் விரும்பாது.

பின்னணி

பின்னணி

இந்த பின்னணியில் தான், ஜெயலலிதா பிரசாரத்தில் பா.ஜ.க. பற்றி வாய் திறக்கவில்லை. அவர் பேசாத காரணத்தால், அ.தி.மு.க.வின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களும் , கட்சி நிர்வாகிகளும் மறந்தும் கூட பாஜக பற்றி வாய் திறக்கவில்லை. இதை சுட்டிக் காட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூட, பாஜகவின் பி டீம்தான் அதிமுக என்று விமர்சித்தார்.

தவ்ஹீத் ஜமாத் விலகியது

தவ்ஹீத் ஜமாத் விலகியது

தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவை விமர்சிக்க ஆரம்பித்தனர். உச்சகட்டமாக, ஜெயலலிதா பாஜகை தி்ட்டிப் பேசாத காரணத்தால், அதிமுகவுக்கு ஆதரவு அளித்த ஒரே முஸ்லீம் அமைப்பான, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் , அதிமுகவுக்காக தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

வேறு வழியில்லாமல் விமர்சனம்

வேறு வழியில்லாமல் விமர்சனம்

இதனால் ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் வாக்கு திமுகவுக்குப் போகும் நிலையை உணர்ந்ததாலேயே வாக்கு சேதாரத்தை தடுக்க வேறுவழி இன்றி இப்போது பாஜகவை விமர்ச்சனம் செய்துள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மோடி - ரஜினி சந்திப்பால் கோபம்

மோடி - ரஜினி சந்திப்பால் கோபம்

மேலும், சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியை தானே நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு நடைபெற்ற போது , முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் தான் இருந்தார் என கூறப்படுகின்றது. ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதாவுக்கும், ரஜினிக்கும் இடையே மனக்கசப்பு உண்டு.

ஜெ. ரசிக்கவில்லை

ஜெ. ரசிக்கவில்லை

இந்த நிலையி்ல், ஒரு மாநிலத்தின் முதல்வர், அடுத்த மாநிலத்தின் முதல்வருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அதே தெருவில் உள்ள மற்றொருவரின் இல்லத்திற்குச் சென்றதை ரசிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

நாங்க விட மாட்டோம்- வைகோ

நாங்க விட மாட்டோம்- வைகோ

ஆனால், அதே கரூர் மாவட்டம், குளித்தலையில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவின் பிரமதர் கனவு பலிக்காது. மாறாக பாஜக 272 இடங்களில் தனிப்பெருபான்மை பெறும். நரேந்திர மோடி தான் பிரதமர் ஆவார். தேர்தலுக்கு பின்பு பாஜக கூட்டணியில் ஜெயலலிதா அங்கம் வகிக்க நாங்கள் ஆதிரிக்க மாட்டோம் என்று வெடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+