சுடச் சுட உணவு… தானாகத் தரும் மெஷின்… சென்னை ரயில் நிலையத்தில் துவக்கம்
சென்னை: பணம் கொடுக்கும் ஏ.டி.எம் மெஷின்தான் பார்த்திருக்கிறோம். இப்போது சுடச் சுட உணவு கொடுக்கும் மெஷினும் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் "அட்சயம்' என்ற அதிநவீன தானியங்கி மூலம் உணவு பொட்டலங்களை விரைவாக பெறும் சேவை மையத்தை ராகேஷ் மிஸ்ரா நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த மையத்தின் மூலம் சைவ, அசைவ உணவுகளை அட்டை மூலம் பணம் செலுத்திய 90 வினாடிகளில் சுடச்சுட பெற முடியும். இந்த வசதி ஏற்கனவே சென்னையில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப வளாகங்களில் உள்ளன.
திறப்பு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் மிஸ்ரா, சென்ட்ரலில் அதிநவீன தானியங்கி உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.
இது, ரயில்வே அமைச்சகத்தின் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இதன் மூலம் பயணிகளுக்கு சூடான, சுவையான, சுகாதாரமான உணவு கிடைக்கும் என்றார் ராகேஷ் மிஸ்ரா.
சென்னை சென்ட்ரலில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள "டேப்களில்' நமக்கு வேண்டிய உணவை நாமே தேர்ந்தெடுத்து, அதற்கு உண்டான தொகையை அங்கு வைக்கப்பட்டுள்ள டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கான இயந்திரத்தில் பணம் செலுத்த வேண்டும்.

பின்பு, நாம் தேர்வு செய்த உணவு மற்றொரு இயந்திரத்தின் வழியாக தானாகவே வெளியே வரும். இதன் மூலம் நகரின் முக்கியமான 4 உணவகத்தின் சைவ, அசைவ உணவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தொழில்நுட்பச் சேவையை தெற்கு ரயில்வே சார்பாக "அட்சயம்' எனும் தனியார் நிறுவனம் வழங்குகிறது என்றார்.
இந்த ஆண்டு பொங்கல், கோடை விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கவில்லை என்பது உண்மையில்லை. தெற்கு ரயில்வே சார்பில் 2013ம் ஆண்டை விட 2014ம் ஆண்டு அதிகளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு முதல் தெற்கு ரயில்வே ஏராளமான சிறப்பு வசதிகளை பயணிகளுக்காக செயல்படுத்தி வருகிறது. இப்போதைக்கு சபரிமலை யாத்திரைக்கான சிறப்பு ரயில்களை இயக்குவதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். விரைவில் சபரிமலை யாத்திரைக்கான சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
சென்னை சென்ட்ரலில் "வைஃபை' சேவை பயணிகளிடையே வரவேற்பு பெற்றுள்ளது. சேவையில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் விரைவில் அவை சரி செய்யப்படும்.












Click it and Unblock the Notifications