பிடித்த கம்பியை விட்டால் போச்சு! குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய மூவரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்
தென்காசி: பழைய குற்றால அருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி உள்பட 3 பேரை ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்றினார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. பல மாவட்டங்களில் கோடை வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டை விட அதிகரித்தது.

இதனால் பலர் கோடை வெயிலுக்கு இதமாக ஊட்டி, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட குளிர் பிரதேசங்களுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெப்பம் குறைந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்திலும் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் குற்றாலத்தில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்தனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவியில் தண்ணீர் இருந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளிப்பதற்காக வந்து கொண்டிருந்தனர். தென்காசி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பழைய அருவியில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று பழைய குற்றால அருவியிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திடீரென காட்டாற்று வெள்ளத்தால் அருவியில் இருந்து தண்ணீர் கொட்டியது. இதனல் சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். அங்கு குளித்துக் கொண்டிருந்த சிறுவன் அஸ்வின் திடீரென வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடும் பணிகள் தீவிரமடைந்தன.
இந்த நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததுமே சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. கோடை விடுமுறையை கழிக்க வந்த சிறுவன் இப்படி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் பலர் சிக்கினர். அவர்களை மீட்பு படையினரும் உள்ளூர் மக்களும் மீட்டனர்.
பழைய குற்றால அருவியில் இருந்து சற்று தொலைவில் தடுப்பு கம்பிகளை பிடித்துக் கொண்டு ஒரு தாய், தந்தை, சிறுமி தத்தளித்தனர். அவர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் காப்பாற்றினர். இது போல் ஏராளமானோரை அங்கிருந்தோர் காப்பாற்றி அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications