தலித் இளைஞர் மர்ம மரணம்- சேலம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை- ஹைகோர்ட்டில் நாளை அறிக்கை தாக்கல்!!
சேலம்: நாமக்கல் அருகே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த என்ஜினீயரிங் பட்டதாரியின் உடல் பிரேத பரிசோதனை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இது பற்றிய அறிக்கை உயர்நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த பட்டதாரி இளைஞர் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று புகார் எழுந்தது.
இதனிடையே அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் கோகுல்ராஜின் உடல் பிரேத பரிசோதனை சேலம் அரசு மருத்துமனையில் நேற்று நடைபெற்றது.
சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சம்பத்குமார், சேலம் அரசு மருத்துவமனை டீன் நியமித்த அரசு பிணவறை தலைமை மருத்துவ அதிகாரி கோகுலரமணன், டாக்டர் சங்கீதா ஆகியோர் கொண்ட சிறப்பு குழுவினர் இந்த பிரேத பரிசோதனையை நடத்தினர். அங்கு காவல்துறை நியமித்த வீடியோகிராபர் ஒருவரும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஒரு வீடியோகிராபர் என 2 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
பிணவறையில் வைக்கப்பட்டுள்ள கோகுல்ராஜ் உடலில் காயங்கள் உள்ளதா? என கண்டறியும் வகையில் முதலில் அவரது உடலை ஸ்கேன் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மொபல் ஸ்கேன் மிஷின் உடனடியாக பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உடல் ஸ்கேன் செய்யப்பட்டது. அது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் உடல் பாகங்கள் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முக்கிய பாகங்கள் ஆய்வுக்காக தனியாக எடுத்து வைக்கப்பட்டன.
பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சம்பத்குமார் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலும், மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் பேரிலும் கோகுல்ராஜ் உடலின் அத்தனை உறுப்புகளும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ரசாயன பரிசோதனைக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்ற்த்தில் தாக்கல் செய்யப்படும். மேலும் கோகுல்ராஜ் இறந்ததாக கூறப்படும் இடத்தையும் நேரில் பார்வையிடுகிறோம் என்றார்.
உறவினர்கள் எதிர்ப்பு
முன்னதாக கோகுல்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்கு அவரது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோகுல்ராஜ் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பின்னர் அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.