என் மீது அபாண்ட பழி... பிறந்த நாள் வாழ்த்தாக ஏற்கிறேன்: கருணாநிதிக்கு மு.க. அழகிரி பதில்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தம் மீது அபாண்ட பழி சுமத்துகிறார் என்றும் இதை தமது பிறந்த நாள் வாழ்த்தாக ஏற்றுக் கொள்கிறேன் என்றும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, தன்னைப் பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் வெறுக்கத்தக்க வகையில் அழகிரி பேசினார் என்றும் ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் இறந்து போய்விடுவார் என்றும் அழகிரி கூறியதை எப்படி ஒரு தகப்பனார் பொறுத்துக் கொள்வார் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
அபாண்டம்
இதற்கு மதுரையில் செய்தியாளர்களிடம் மு.க. அழகிரி இன்று இரு முறை விளக்கம் அளித்தார். இன்று மாலை செய்தியாளர்களிடம் மு.க. அழகிரி கூறியதாவது:
கருணாநிதி என் மீது இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்துவார் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. ஆனால் அதை அவர் எனக்கு வழங்கிய பிறந்த நாள் வாழ்த்தாக ஏற்றுக் கொள்கிறேன். ஏற்றுக் கொள்கிறேன் என்றால் அவர் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.
தொண்டர்களுக்காகவே....
ஆனாலும் இந்த நேரத்தில் சில விளக்கங்களை சொல்ல விரும்புகிறேன். நான் 24ந் தேதி காலை தலைவரை சந்தித்து விளக்கங்களை எடுத்துச் சொன்னேன். தொண்டர்களின் குற்றச்சாட்டுகளையும் ஒன்றிய செயலாளர்களின் குற்றச்சாட்டுகளையும் தலைவரிடம் காண்பித்தேன்.
அதற்குக் கிடைத்த பரிசு என்னை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. நியாயத்துகாக தொண்டனுக்காக போராடியதற்காக இப்படிப்பட்ட பரிசு கிடைத்தது.
அன்று எந்த பழியும் இல்லையே..
ஆனால் அன்றைய தினம் என்னை விலக்கிய போது பொதுச் செயலாளர் என்னை விலக்கியதற்கான காரணங்களைச் சொல்லியிருக்கிறார். பல காரணங்களில் இன்று தலைவர் சொன்ன எந்தப் பழியும் அதில் இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.
பொதுச் செயலாளரின் ஒழுங்கு நடவடிக்கை முரசொலியில் உள்ளது பாருங்கள். அவர் சொன்ன ஒரு குற்றச்சாட்டு, இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூற அறிவாலயம் இருக்கிறது, கட்சி அமைப்பு இருக்கிறது என்றார்.
எல்லாமே சிஐடி காலனியில்தான்..
ஆனால் நான் ஏன் குறைகளை ஏன் அவரிடம் சொன்னேன். அறிவாலயம் இல்லையா என்று அவர் கேட்டுள்ளார். ஆனால், இது குறித்து அவர்கள் எல்லாமே சிஐடி காலனியில்தான் பேசியிருக்கிறார்கள்.
தொண்டர்களின் குற்றச்சாட்டுகள், ஒன்றியச் செயலாளர்களின் குற்றச்சாட்டுகள் எல்லாமே அறிவாலயத்துக்கு பேக்ஸ் செய்யப்படுகிறது. ஆனால், குற்றச்சாட்டுகள் மறைக்கப்படுகிறது. அவை எதுவுமே தலைவருக்கோ பொதுச் செயலாளருக்கோ சென்று சேர்வதில்லை.
தலைவரிடம் நேரில்..
அதனால்தான் நேரில் தலைவரிடம் சென்று சொன்னேன். இது மதுரையில் மட்டும் நடக்கவில்லை; தமிழ்நாடு முழுக்க நடக்கிறது என்று குற்றச்சாட்டை சொன்னேன்..
அன்றைய தினம் என்னை விலக்கியபோது, என்னை விலக்கியதற்கான காரணங்களை எல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவர் நான் ஏதோ முதலிலேயே பத்திரிகைகளுக்குக் கொடுத்தேன் என்றார். ஆனால் நான் நீக்கப்பட்ட பிறகுதான் சொன்னேன்.
துரைமுருகனுடன் சந்திப்பு ஏன்?
இன்னொரு உண்மையை சொல்லணும். 26ந் தேதி நான் துரை முருகனை சந்தித்தேன். ஏன் வீரவணக்க நாள் கூட்டத்துக்கு போகலை என்று கேட்டேன். அவர் போகலை கேன்ஸல் பண்ணிட்டேன் என்றார்.
கருணாநிதி நூறாண்டு வாழ வேண்டும்
அவரிடம் துணை பொதுச் செயலர் என்ற முறையில் குற்றச்சாட்டை சொன்னேன். தலைவரிடம் சொன்னேன் பரிசீலனை செய்யுங்கன்னு சொன்னேன். இதுதான் நடந்தது. ஆனால் நான் ஒன்று சொல்கிறேன்...
நான் என்றும் தொண்டர் பக்கம் இருப்பேன். தொண்டர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..; தலைவர் நன்றாக இருக்கணும் நூறாண்டுகள் வாழணும். அவருக்கு முன்னாடி நாங்கள் சாகணும். அவர் சிந்தும் கண்ணீர் எங்கள் பிணத்தின் மீது விழ வேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம்.
இவ்வாறு இன்று மாலை அழகிரி கூறினார்.
தம்பியை பற்றி பேசினா கட்சியை விட்டு நீக்குவதா?
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது: என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்குபொதுச் செயலாளர் அன்று ஒரு காரணம் கூறினார். இன்று, தலைவர் ஒரு காரணம் கூறுகிறார். அப்படியென்றால், அன்பழகன் கூறியது தவறா? ஸ்டாலினை பற்றி பேசியதால் நீக்கம் என்கிறார்கள். ஸ்டாலின் எனது தம்பிதானே. எனது தம்பியை பற்றி நான் பேசக்கூடாதா? ஸ்டாலினை பற்றி பேசினால் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்களா? சரி, இந்த விளக்கத்தை ஏன் நான் பேசிய அன்றே சொல்லவில்லை. இன்று ஏன் சொல்கிறார்கள் என மக்கள் கேட்கிறார்கள்.
கருணாநிதியை அடித்தாரா
நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம், துரைமுருகனை சந்தித்தது ஏன்? என்று கேட்கப்பட்டது. இதற்கு தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலர் என்ற முறையில், அவரை சந்தித்தேன். காரணமில்லாமல் என் ஆதரவாளர்களை நீக்கியது குறித்து விளக்கினேன் என்றார். மேலும் உங்க அப்பாவை (கருணாநிதியை) அடித்ததாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு "யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? என்று கேட்டிருந்தார். இந்நிலையில்தான் இன்று அழகிரி உரத்த குரலில் தம்மை வெறுக்கத்தக்க வார்த்தைகளில் பேசியதாக கருணாநிதி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.