திமுகவில் மீண்டும் அழகிரி: கருணாநிதியை சந்தித்த 'தூதர்'' கே.பி. ராமலிங்கம் தகவல்
சென்னை: திமுகவில் மு.க. அழகிரி எந்த நேரத்திலும் சேர்த்துக் கொள்ளப்படக் கூடும் என்று கருணாநிதியை சந்தித்த அவரது தூதர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கட்சியில் கலகக் குரல் எழுப்பியதற்காக தென் மண்டல அமைப்புச் செயலராக இருந்த மு.க. அழகிரி டிஸ்மிஸ் செய்யபட்டார். லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
மும்முர முயற்சி
இதனைத் தொடர்ந்து கட்சியில் களை எடுப்பு தொடங்கிய போது அழகிரியின் ஆதரவாளர் கே.பி. ராமலிங்கம் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் மு.க. அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதற்கான முயற்சிகள் மும்முரமாக நடைபெற்றன.
செல்வி, கனிமொழி
திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி இதில் முக்கியப் பங்கு வகித்தார். அதேபோல் கனிமொழியும் தீவிரம் காட்டினார்.
கே.பி. ராமலிங்கம்- கருணாநிதி சந்திப்பு
இதன் ஒருபகுதியாக அழகிரியின் தூதராக ராஜ்யசபா எம்.பி. கே.பி. ராமலிங்கம் கருணாநிதியை சந்தித்து பேசியுள்ளார்.
அழகிரியின் 3 நிபந்தனைகள்
இந்த சந்திப்பின் போது, அழகிரிக்கு மீண்டும் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை அளிக்க வேண்டும், தென் மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் உரிமையை அழகிரிக்கு வழங்க வேண்டும். கனிமொழியை வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற மூன்றுதான் அழகிரியின் முக்கிய கோரிக்கைகள் என்று ராமலிங்கம் முன்வைத்திருக்கிறார்.
கருணாநிதி அழைப்பார்..
இதை கருணாநிதியும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்து நாளேடு ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள கே.பி. ராமலிங்கம், எந்த நேரமும் கருணாநிதியை சந்திக்க அழகிரி அழைக்கப்படலாம். விரைவில் அழகிரிக்கான பதவியும் அறிவிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.
இதனால் அழகிரி எந்த நேரத்திலும் திமுகவில் 'கண்கள் பணிக்க' மீண்டும் சேருவார் என்பது உறுதியாகி இருக்கிறது.