காசு வாங்கிக் கொண்டு திமுகவில் சீட் கொடுத்திருக்கிறார்கள் - மு.க.அழகிரி
மதுரை: நாடாளுமன்றத் தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள் என்று திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மேலும் வரும் தேர்தலில் திமுகவுக்கு 3வது இடம்தான் கிடைக்கும். அது ஜெயிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது...
எல்லாரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள்
வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள்.
பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே சீட்
வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முறையான நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை
இன்னும் சொல்லப்போனால், அதிமுகவிலிருந்துவிட்டு பின்னர் திமுகவுக்கு வந்தவர்களுக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அழகிரி தெரிவித்துள்ளார்.
நெப்போலியன், ரித்தீஷுக்கு ஆப்பு
வேட்பாளர் பட்டியலில் அழகிரிக்கு ஆதரவாக நின்றவர்களான நடிகர் நெப்போலியன், ரித்தீஷ் ஆகியோருக்கு சீட் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெப்போலியனுக்கு சீட் கிடைக்காமல் தடுத்தது நேரு
நெப்போலியன் அழகிரி ஆதரவாளர் என்பதோடு, அவரது மாமாவான திருச்சி கே.என். நேருவும் சேர்ந்து சீட் கிடைக்க விடாமல் தடுத்து விட்டார் என்று கூறப்படுகிறது.
எதிர்பார்த்தால்தானே ஏமாற்றம்
இருப்பினும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று நிச்சயமாக தெரியும். எனவே எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றமும் அடையவில்லை என்று அழகிரி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.