அதிமுக உடன் பாஜக ஏன் மல்லுக்கட்டுது தெரியுமா? இதான் காரணமாம்!
சென்னை: 2016 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர்கள் செல்லும் இடமெங்கும் வாலண்டியராக கூறி பின்னணியில், மிக முக்கிய திட்டம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதை தடுக்கவே இதுபோன்ற தகவல்களை ஊடகங்களில் வெளியிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலை சந்திக்க அர சியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுகவோ தங்களின் பொதுச்செயலாளர் வழக்கில் இருந்து விடுபடுவாரா என்ற யோசனையில் இருக்க பிற கட்சியினரோ கூட்டணி, வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளையும் நடத்தி வருகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
2014 லோக்சபா தேர்தலின் போது பாஜக தலைமையில் தேர்தலை சந்தித்த மதிமுக பிறகு அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாமக தனித்து செயல்படத் தொடங்கியது. தேமுதிகவும் ஒதுங்கியே இருக்கிறது. இதனால் பாஜக தலைமையிலான தேஜ., கூட்டணி தொடர்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெருங்கும் அதிமுக
லோக்சபா தேர்தலில் தனித்து களம் கண்டு வெற்றிவாகை சூடிய அதிமுகவோ மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியது. கடந்த ஜனவரி 18ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து லோக்சபாவில் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை அதிமுக ஆதரித்தது.
சட்டசபை தேர்தலில் கூட்டணி
இதைவைத்து கணக்கு போட்ட எதிர்கட்சிகட்சிகள் 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது என்று தகவல்களை பரவி வருகின்றன.
திமுக தலைமையில் கூட்டணி
அதேநேரத்தில் தேமுதிக, காங்கிரஸ், இடதுசாரிகளை இழுத்து பெரிய கூட்டணி அமைக்கலாம் என்ற நினைப்பில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையிலேயே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என பாஜக தலைவர்கள் திடீரென பேசி வருகின்றனர்.
தமிழிசை உறுதி
இந்த கருத்தை உறுதிபடுத்தும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் அதிமுக, திமுகவுடனும் கூட்டணி அமைக்கும் வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் மாற்று அணியை உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.
பாஜக எதிர்க்கும் பின்னணி
பாஜக தலைவர்களின் இந்த திடீர் அதிமுக எதிர்ப்புக்கு பின்னணியில் கூட்டணி திட்டமே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயல்லிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து காப்பாற்ற நினைப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனவே, தங்கள் மீது பழி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்போது அதிமுகவை பாஜகவினர் விமர்சிப்பதாக கூறப்படுகிறது.
2004 கூட்டணி திரும்புமோ?
2004ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தபோது, திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 100 சதவீத வெற்றியைப் பெற்றன. தற்போது அதிமுக பாஜக கூட்டணி என்ற செய்திகள் தொடர்ந்து வெளியானால் 2004-ல் நடந்ததைப்போல எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் திரளக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. இதைத் தடுக்கவே அதிமுகவை பாஜக தலைவர்கள் திடீரென விமர்சிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
கணக்கிலேயே எடுத்துக்கலையே
இது ஒருபுறம் இருக்க, பாஜகவின் நிலை பற்றி கருத்து கூறியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோ, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலேயே பாஜகவின் செல்வாக்கு என்ன என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் பாஜகவை ஒரு பொருட்டாகவே மக்கள் நினைக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
எதிர்கட்சிகள் இணைவோம்
சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதை யாராலும் தடுக்க முடியாது.. அதிமுக, பாஜகவின் ஆசைகள் நிறைவேறாது என்றும் கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது திமுக தலைமையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.