ஓவர் டைம் பார்த்ததற்கு சம்பளம் கொடுங்கள்: வங்கி ஊழியர்கள் கோரிக்கை
கூடுதலாக பணியாற்றிய நேரத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை அமலில் இருந்த 50 நாட்களில் கூடுதலாக பணியாற்றிய நேரத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த பழை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருந்தாலும் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை மாற்றுவதில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் நாட்டில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு அதிக அளவில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 50 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வங்கிகளில் கூட்டம் அலைமோதியதால் ஊழியர்கள் தங்களது பணி நேரத்திற்கும் மேலாக கூடுதலாக பல மணி நேரம் கணக்கில்லாமல் வேலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை அமலில் இருந்த 50 நாட்களில் கூடுதலாக பணியாற்றிய நேரத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தின் துணை அமைப்பான தேசிய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 50 நாட்களில் வங்கி ஊழியர்கள் 12-18 மணி நேரம் பணி புரிந்தனர். ஆனால், சில வங்கிகள் மட்டும் தான் கூடுதலாக பணியாற்றிய நேரத்தில் ஓவர் டைமாக ஏற்றுக் கொண்டது. வேலை நேரத்தை தாண்டி கூடுதலாக பணியாற்றியதை ஓவர் டைமாக வங்கி நிர்வாகங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications