பீப் பாடல்: சிம்பு, அனிருத்துக்கு மேலும் ஒரு சம்மன்... 8-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு
கோவை: பீப் பாடல் விவகாரத்தில் வருகின்ற 8ம் தேதி சிம்பு, அனிருத் இருவரையும் நேரில் ஆஜராக சொல்லி, சம்மன் அனுப்புமாறு மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட்டு சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவை பிடிக்க 3 தனிப்படைகள் சென்னை காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிம்பு எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற சூழ்நிலையில் கனடாவில் தங்கியிருக்கும் அனிருத்தையும் இந்தியா கொண்டு வந்து கைது செய்திட போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில், நம்ம மேட்டுப்பாளையம் என்ற அமைப்பை சேர்ந்த ருபி என்பவர் நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்கொன்றைத் தொடர்ந்திருக்கிறார்.
அந்த மனுவில் அவர் கூறும்போது "நடிகர் சிம்பும், இசையமைப்பாளர் அனிருத்தும் பாடி வெளியிட்டு உள்ள இந்த ஆபாச பாடல் பொது இடங்களில் வெளியிடப்பட்டு இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதே பாடலில் ஆபாச வரிகளை 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொண்டு சென்றது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். பொது இடங்களில் ஆபாச பாடல் பயன்படுத்தப்படுவதும் தண்டனைக்குரியது.
அத்துடன் பெண்களை ஆபாசமாக வர்ணித்து அவர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் இதுபோன்ற பாடல் வெளியிடப்பட்டது மிகப்பெரிய குற்றமாகும்.
இந்த குற்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான கடுமையான குற்றம் ஆகும். ஆகவே இந்த பாடலுக்கு காரணமான சிம்பு மற்றும் அனிருத் ஆகியோரை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்".இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி மாஜிஸ்திரேட்டு சுரேஷ்குமார் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கில் ஒரு தனியார் டி.வி.சேனல் முதன்மை செய்தியாளர், நடிகர் சங்க தலைவர் நாசர், மேட்டுப்பாளையம் சி.ஐ.டி.யு. தாலுகா செயலாளர் பாட்சா ஆகியோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.
வழக்கை மாஜிஸ்திரேட்டு சுரேஷ்குமார் விசாரித்து நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும், 8-ந் தேதி மேட்டுப்பாளையம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று இருவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
ஏற்கனவே கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் வருகின்ற 2 ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று, 2 வது முறையாக சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.