அதிமுகவின் 'நண்பேன்டா'வான திருநாவுக்கரசர்- பாஜகவுக்கு செக் வைக்க களமிறங்கிய காங்.!
சென்னை: அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடாமல் இருக்க தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசருடன் இணைந்து வியூகம் வகுத்து செயல்பட்டு வருவது சசிகலாவின் கணவர் எம். நடராஜன் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை அது வளர்ச்சி அடைய முடியாத மாநிலங்களில் ஒரு பாணியை கடைபிடித்து வருகிறது. அதாவது அந்த மாநிலத்தில் உள்ள செல்வாக்குமிக்க கட்சியை உடைத்து கணிசமான எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து காலூன்று என்பதுதான் பாஜகவின் பாணி.
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படித்தான் பாஜக நிலைகொண்டிருக்கிறது. தமிழகத்தில் எந்த காலத்திலும் வேர்பிடிக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது பாஜக.
நெருக்கடி கொடுத்த பாஜக
தற்போது முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள நிலையில் அதிமுகவை சிதைத்து கால்பதிக்க முடியுமா என கனவு காண்கிறது பாஜக. மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜகவின் நெருக்கடி அதிமுகவை நிலைகுலைய வைத்தது.
களத்துக்கு வந்த நடராஜன்
தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வருவதில் பாஜக மும்முரமாக ஆலோசித்து வந்தது. இதற்கு செக் வைக்கும் வகையில் சசிகலாவின் கணவர் நடராஜன் வகுத்த வியூகம்தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கைகோர்த்த திருநாவுக்கரசர்
அதிமுக இரண்டாக உடைந்த போது ஜெயலலிதாவுக்கு பக்க பலமாக இருந்தவர்கள் திருநாவுக்கரசர், சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்டோர்தான்... தற்போதும் அதிமுகவுக்கு நெருக்கடி உருவான நிலையில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் உதவியைத்தான் எம். நடராஜன் நாடினாராம்.
காங்கிரஸும் சிக்னல்
பாஜகவின் சதிக்கு எதிராக மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸிடம் அடைக்கலம் கோருவதுதான் சரியாக இருக்கும் என கணக்குப் போட்டார் நடராஜன். அவருக்கு தோதாக தமிழக காங்கிரஸ் தலைவராக பழைய நண்பர் திருநாவுக்கரசர் உதவ முன்வந்திருக்கிறார். அதிமுகவின் தத்தளிப்பை உணர்ந்த காங்கிரஸ் மேலிடம் அரவணைக்கவும் தயாரானது.
மகிழ்ச்சி
தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணியை எப்போதும் விரும்பாதவராகவே ராகுல் இருந்து வருகிறார்... அவரும் இந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தாமே சென்னைக்கு வருவதாக திருநாவுக்கரசர் மூலம் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தார் ராகுல். மகிழ்ந்து போய் நிம்மதி பெருமூச்சுவிட்டது மன்னார்குடி தரப்பு.
தனிமைப்படுத்தப்படும் திமுக
எதிர்காலத்தில் அதிமுக- காங்கிரஸ் மட்டுமல்ல திமுகவை தனிமைப்படுத்த மெகா கூட்டணியே அமைப்பதற்கான செயல்திட்டங்களுடன் களமிறங்கியுள்ளனராம் நடராஜனும் திருநாவுக்கரசரும்... ஒருகாலத்தில் முதல்வர் பதவி நாற்காலிக்கு மிக அருகில் இருந்தவர்கள் இருவருமே... இப்போது ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை யார் நடத்துவது என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பு இருவருக்குமே கிடைத்திருக்கிறது..
மீண்டும் தலைப்பு செய்திகளில் திருநாவுக்கரசர்!