ஆர்.கே.நகரில் தமிழிசை திடீர் சாலை மறியல்.. தேர்தல் அதிகாரி வராவிட்டால் எழ மாட்டேன் என திட்டவட்டம்
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சாலை மறியல் நடத்தி வருகிறார்.
ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். இதையொட்டி தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவருக்கு வாக்கு சேகரித்து ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்தனர்.
இந்த நிலையில், ஆர்.கே.நகரில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றம் சாட்டி, புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு அருகே, தமிழிசை தலைமையில் மதியம் திடீர் சாலை மறியல் நடத்தி வருகிறார்கள்.

போக்குவரத்து நெரிசல்
பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனும் சாலை மறியலில் பங்கெடுத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்துள்ளன.

பூத் போட்டு கொடுக்கிறார்கள்
இதுகுறித்து தமிழிசை கூறுகையில், ஆர்.கே.நகரில் பூத் போட்டு பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. இதை தேர்தல் ஆணையம் தடுக்கவேயில்லை. மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்களுக்கு நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம். தேர்தல் அதிகாரி இங்கு வராவிட்டால் சாலை மறியலை கைவிட மாட்டோம்.

சிந்தனை செய்யவிடுவதில்லை
ஊழலை இவர்களிடமிருந்து பிரிக்கவே முடியவில்லை. நாங்கள் பிரசாரம் செய்த வாக்குகளை பெற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் மக்களுக்கு பணம் கொடுத்து அவர்களை சிந்திக்கவிடாமல் செய்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோஷங்கள்
தமிழிசைக்கு ஆதரவாகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் பாஜகவினர் கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். தமிழிசையின் திடீர் போராட்டத்தால் ஆர்.கே.நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications