பாஜக- தேமுதிக கூட்டணி பேரம்: கடைசி கட்ட இழுபறிகள்... பரபரப்புகள்
சென்னை: கடைசி நேரத்தில் கிடைத்த ரயில் பெட்டியில் தொற்றி ஏறும் இழுபறி நிலைதான் இப்போது தமிழக தேர்தல் களத்தில்.
எந்தக் கட்சி எந்த அணியில் என்று கடைசி வரை உறுதியாகக் கூற முடியாத ஒரு நிலையற்ற அரசியல் சூழல்தான் இங்கு நிலவுகிறது.
இதில் உறுதியான முடிவோடு களம் கண்டிருப்பது தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாதான். சின்னச் சின்ன கட்சிகளோடு மட்டும் பேசிக் கொண்டே, 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, ஜம்மென்று பிரச்சாரத்துக்குக் கிளம்பிவிட்டார் முதல்வர் (சிறு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என்றாலும், அவர்கள் அதிமுக வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள்!).
மற்ற கட்சிகளின் முகாம்களிலோ இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்ற நிலைமை. வாக்காளர்களைப் பொறுத்தவரை 'அட்வான்டேஜ்' அதிமுக என்ற நிலையை வலுவாக உருவாக்கியுள்ளது இந்த சூழல்.
பாஜகவின் வலுவான கூட்டணி
நாளைய பிரதமர் நரேந்திர மோடி என்ற கோஷத்துடன் களமிறங்கியிருக்கும் தமிழக பாஜக, ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.
இந்த அணியில், ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், எடுத்த முடிவில் உறுதியோடு ஆரம்பத்திலேயே வந்து சேர்ந்தவர் வைகோ. அவர் கேட்ட தொகுதிகள் எண்ணிக்கை 12. அட்லீஸ்ட் 10ஆவது இருக்க வேண்டும் என்றார். பாஜக கமுக்கமாக இருந்தது. ஆனால் வைகோவை விட்டுவிடவும் இல்லை.
பாமக கேட்ட 15
அடுத்து பாமகவை அழைத்தது. அவர்கள் 15 கேட்டு, பெரிய மனது பண்ணி 12-க்கு இறங்கி வந்தனர். ஆனால் பாஜக முடிவைச் சொல்லவில்லை.
போக்குக் காட்டிய விஜயகாந்த்
அவர்கள் கவனமெல்லாம் தேமுதிகவின் முடிவு பற்றித்தான். அஃபிஷியலாகவோ... அன்அஃபிஷியலாகவோ பாஜகவின் அனைத்து மட்டத் தலைவர்களும் விஜயகாந்த் அல்லது அவர் ஆட்களோடு பேசிவிட்டனர்!
ந்தா.. அந்தா என்று போக்குக் காட்டி வந்த விஜயகாந்த், தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியான இன்றுதான் பிடிகொடுத்துப் பேசியிருக்கிறார் பாஜக தலைவர்களுடன்.
காரணம், அவருக்கு அனைத்து பக்க கதவுகளும் சாத்தப்பட்டுவிட்டன. இன்னும் இழுத்தடித்தால் பாஜக கதவும் கூட மூடப்படும் சூழல்.
திமுக நிலை
சின்ன நப்பாசையுடன் காத்திருந்த திமுக, தான் ஒருக்களித்த வைத்திருந்த கதவையும் இழுத்துமூடி, 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப் போவதாகக் கூறி, நேர்காணலில் பிஸியாகிவிட்டது. அதே நேரத்தில் விஜய்காந்துக்கு இன்னும் வலையை வீசியபடியே தான் உள்ளது. 13 தொகுதிகள் வரை விஜய்காந்துக்குத் தர திமுக தயாரே என்கிறார்கள்.
தேமுதிகவுக்கு 14
எனவே இருக்கிற ஒரே வாய்ப்பு... அதுமட்டுமல்ல, கூட்டணிக்கு தலைமையாக இருக்கும் பாஜகவை விட அதிக தொகுதிகள்... எனவே சட்டென்று பேரத்தின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டார் விஜய்காந்த்.
இறுதிக் கட்டப் பேச்சுக்களின்படி, தேமுதிக 16 தொகுதிகளைக் கேட்டு, 14 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ள முன் வந்திருக்கிறதாம். ஆனால், இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
மனச்சங்கடத்தில் மதிமுக
மதிமுகவுக்குதான் இதில் பெரும் மனச் சங்கடம், வழக்கம்போல. முதலில் சேர்ந்த அந்தக் கட்சிக்கு 6 தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு தொகுதிகள் கிடைத்தால், தங்கள் செல்வாக்கை இந்தத் தேர்தல் காட்டிவிட முடியும் என எதிர்ப்பார்க்கிறது வைகோ தரப்பு. ஆகவே இன்னமும் அந்த 6 தொகுதிகளுக்கு மதிமுக தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை.
பேச்சு முடிந்தது
இதற்கிடையே, கூட்டணி குறித்த பேச்சுகள் இனி தொடராது. இன்றோடு முடிந்துவிடும் என பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் தெரிவித்தார். கட்சித் தலைவர் பொன் ராதாகிருஷ்ணனும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவே கூறுகிறார்.
இன்று அறிவிப்பு
கூட்டணிப் பேச்சு, இறுதி செய்யப்பட்ட தொகுதிகள் போன்ற விவரங்களை பாஜக தலைமைக்கு இன்று காலை அனுப்பிவிட்டனர். இன்று மாலை அல்லது நாளை பாஜக அதிகாரப்பூர்வமாக இந்த தொகுதிப் பங்கீடு விவரங்களை கமலாலயத்தில் வைத்து அறிவிக்கலாம் என்கிறார்கள்.
ஆனால், கேப்டன் வாயால் விஷயம் வரும்வரை எதுவுமே நிச்சயமில்லை என்பதே உண்மை!