கோவை மண்டலத்தில் ம.ந.கூவை விட அதிக வாக்குகள் பெற்ற பாஜக! வானதி டெபாசிட் தப்பியது
சென்னை: கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள பத்து தொகுதிகளில் இரண்டைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியை பின்னுக்குத் தள்ளி பாஜக மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தவிர மீதமுள்ள தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமாகா, மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.
ஆனால் மேட்டுப்பாளையம், வால்பாறை தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் மநகூவை சேர்ந்த வேட்பாளர்களை நான்காவது இடத்துக்குத் தள்ளி பாஜக மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
இதில், பொள்ளாச்சியில் மட்டும் பாஜக நான்காவது இடத்தையும், தேமுதிக ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. கோவையில் குறிப்பட்ட செல்வாக்கைப் பெற்றிருந்த கம்யூனிஸ்ட்கள், மதிமுக, தேமுதிக தங்களது செல்வாக்கை இழந்துள்ளன. இவர்கள் மீது காட்சிய பரிவை தற்போது பாஜக மீது கோவை மக்கள் காட்ட தொடங்கியுள்ளனர்.
பாஜக சார்பில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளைப் பெற்றுள்ளார். தோற்றாலும் கூட இது நல்ல எண்ணிக்கை என்பதை பாஜகவே ஒப்புக்கொள்ளும்.
கோவை மாவட்டத்தில், ம.ந.கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். அதேபோல வானதி சீனிவாசனைத் தவிர பிற அனைத்து பாஜக வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தபோதிலும், சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கல்யாணசுந்தரம் 4,354 வாக்குகளை பெற்றார், இதேபோல பல வேட்பாளர்கள் 2000த்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர்.
மேட்டுப்பாளையத்தை தவிர பிற தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். இத்தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளையே பாமக பெற்றுள்ளது.
இதில், சிங்காநல்லூர் தொகுதியில் பாமக வேட்பாளர் அசோக் ஜெயேந்தர் மட்டும் அதிகபட்சமாக 2,865 வாக்குகள் பெற்றுள்ளார். வால்பாறை தொகுதி வேட்பாளர் சிங்காரவேல் 580 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர்.