நாங்க எதிர்பார்க்கலை… ஆனாலும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள்: சொல்கிறார் தமிழிசை
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். எனினும் வழக்கில் வென்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று காலை, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையொட்டி, தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழிசை கூறும்போது, "சொத்துக் குவிப்பு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது. வழக்கில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழகம் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. எனவே, வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜகவின் செயல்பாடு புதிதாக திட்டமிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருமாவளவன் கருத்து
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, "சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இருப்பினும், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
முன்னதாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்தது. ஆனால், தற்போது கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை இவ்வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
இந்த இரண்டு தீர்ப்புகளையுமே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இரண்டு நீதிபதிகளுமே தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளனரா அல்லது நெருக்கடி காரணமாக தீர்ப்பு வழங்கினரா என்பது கேள்விக்குரியாக உள்ளது. இந்த தீர்ப்பால் மற்ற அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி என்று கூறுவது பொருத்தமாகாது என்றார்.