குமரியில் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: சாலை மறியல், பந்த்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பாஜக பிரமுகரை மூன்று பேர் கொண்ட கும்பல் வெள்ளிக்கிழமை வழிமறித்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. மேலும், வீடுகள் அடித்து சேதப்படுத்தப்பட்டன. வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இன்று நாகர்கோவிலில் கடையடைப்பு போராட்டத்திற்கு பாஜகவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் முத்துராமன் (45). இவர், கன்னியாகுமரி மாவட்ட பாஜக வர்த்தக அணித் தலைவராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
நாகர்கோவிலில் உள்ள தனது அலுவலகத்துக்குச் செல்வதற்காக முத்துராமன், வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டார். வட்டவிளை அருகே வந்தபோது, 3 பேர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்த பொதுமக்களும், முத்துராமனின் உறவினர்களும் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒரு பகுதியினர் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளைச் சேதப்படுத்தினர்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இச் சம்பவம் குறித்து கோட்டார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முத்துராமனை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் தாக்கப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதற்குப் பின்னணி என்ன என்பதை போலீஸார் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக வர்த்தக பிரிவின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் முத்துராமன் நாகர்கோவிலில் பட்டப்பகலில் கொலைவெறி தாக்குதலுக்குள்ளாகி வெட்டப்பட்டுள்ளார். கொடூரமான இந்தக் கொலை வெறித்தாக்குதலுக்கு, பாஜக கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் பாஜகவினர் மீதும் மற்ற இந்து அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் மீதும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரியதாகவுள்ளது. இனிமேலும் இத்தகைய தாக்குதல்களை நடைபெறா வண்ணம் கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக மேற்கொண்டு குற்றவாளிகள் எந்தப்பிரிவின், எந்த இயக்கத்தைச் சார்ந்தவராக இருப்பினும் உடனே கைது செய்ய வேண்டும்.
இல்லையென்றால் பாஜகவினர் நாகர்கோவிலில் மிகப்பெரிய போராட்டத்தை அறிவித்திருப்பது போல, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்த வேண்டியதிருக்கும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.