பாஜக அணியில் தேமுதிக- பேச்சுவார்த்தை தொடருகிறது: பொன். ராதாகிருஷ்ணன்
திருச்சி: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பான பேச்சுகள் மதிமுகவுடன் முடிவடைந்துவிட்டது, தேமுதிகவுடன் தொடருகிறது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
திருச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலர் முரளிதர் ராவ் தலைமையில் அக்கட்சியில் தமிழக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மீண்டும் மோடி வருகை
பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை தமிழத்திற்கு மீண்டும் வருகை தருமாறு அழைத்துள்ளோம். அவர் வருகை தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
பூத் கமிட்டி
வருகிற 20-ந்தேதி முதல் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி உள்பட அனைத்து பொறுப்பாளர்களும் நியமித்து தேர்தலுக்கு தயாராகி விடுவோம். தேர்தல் பணியை சனிக்கிழமை முதல் தொடங்குகிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நாங்கள் தேர்தல் பணியை சிறப்பாக செய்வோம்.
பாமக, மதிமுகவுடன் பேச்சுகள்
இந்திய அளவில் மோடி அலை நன்றாக உள்ளது. தமிழகத்திலும் அந்த அலை முழுமையாக உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக பா.ம.க.வுடன் ஏற்கனவே பேசி உள்ளோம். ம.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேசிவருகிறோம்.
தேமுதிகவும் வரும்
தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு வரும் என நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் விஜயகாந்த், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து மத்தியில் மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமைவதற்காக எங்கள் கூட்டணியில் சேருவது குறித்து நல்ல முடிவு எடுப்பார்.
தை மாதத்தில் முடிவு அறிவிப்பு?
அனேகமாக ஜனவரி 15ந் தேதி அவர் தமது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.