கிடைக்கிற கேப்பில் எல்லாம் ரஜினியை வளைக்க அல்லாடும் பாஜக
சென்னை: தமிழகத்தில் எப்படியாவது வேர்பிடித்துவிட வேண்டும் என ஜீவமரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக... இதற்காக ரஜினிகாந்த் என்ற உச்சநட்சத்திரத்தை வளைத்துப் போட அத்தனை முயற்சிகளையும் நாள்தோறும் மேற்கொள்கிறது பாஜக.
அதிமுக, திமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்று என தமிழகத்தில் எதுவும் இல்லை. இந்த இரு கட்சிகளுக்கு மாற்று என களமிறங்கிய தேமுதிக, கட்சியைத் தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் இருக்கிறது.
அதிமுக, திமுகவை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தில் அமரப் போகிறோம் என பிரகடனம் செய்த மக்கள் நலக் கூட்டணி மண்ணைக் கவ்வியதுதான் மிச்சம்... உள்ளது போச்சுடா என்பதற்கேற்ப இனி எந்த காலத்திலும் திமுக அதிமுகவுடன் கூட்டணி சேராமல் தனியே.. தன்னந்தியே என அல்லாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகள்..
பாரா முக பாஜக
இவர்களின் நிலையே இப்படி என்றால் தமிழகத்தில் பாரா முகமாக இருக்கிற பாரதிய ஜனதாவோ... ஆஹா நாங்கதான்.. அடுத்து நாங்கதான்.. இதோ நாங்க என ஒவ்வொரு தேர்தலிலும் சளைக்காமல் 'சவுண்டு விட்டுக் கொடுக்கிறது.
ரஜினியை விட்டா வழியில்லை...
ஆனாலும் தமிழகத்தில் வேர்பிடிக்கக் கூட மூச்சு முட்டுகிறது பாஜகவுக்கு... இந்த நிலையில் அந்த கட்சிக்கு சுவாசமாக நடிகர் ரஜினிகாந்த் என ஒரு நப்பாசை இருந்து வருகிறது. அதனால்தான் லோக்சபா தேர்தலின் போது பிரதமர் வேட்பாளரான மோடி, ரஜினிகாந்த் வீட்டுக்கே சென்று சந்தித்துப் பார்த்தார்..
பத்ம விருது..
எதுவும் நடக்கவில்லை... அப்புறம் ரஜினிகாந்துக்கு பாரத ரத்னா விருது தரப்போவதாக சொன்னார்கள்... கடைசியாக பத்ம விபூஷண் விருதை கொடுத்து ரஜினிகாந்த் மீதான 'பாசத்தை' காட்டிப் பார்த்தார்கள்.. ஆனாலும் ரஜினிகாந்தோ அரசியல் பாதையை நோக்கி சிந்தித்ததாக கூட தெரியவில்லை..
விடாது துரத்தும் கட்சிகள்
ஏனெனில் அவருக்கு தெரியும் தம்முடைய வாய்ஸ் எந்த அளவு எடுபடும் என்பது... 1996-ம் ஆண்டு தேர்தலின் போது விட்ட சவுண்டுதான் ஒர்க் அவுட் ஆனது.. அதற்கு பின்னர் என்னதான் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்து பார்த்தாலும் தமிழக மக்கள் கேட்பதாக இல்லை... ஆனால் அரசியல் கட்சிகளுக்குத்தான் அவர் மீதான பாசம் நீடிக்கிறது.
கோர்த்துவிட்ட தமிழிசை
இதில் பாஜக ஒன்றும் விதிவிலக்கு அல்ல... இன்று கூட சென்னையில் கர்நாடகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காவிரி பிரச்சனைக்காக ரஜினிகாந்த் பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காகவா? அல்லது பிரச்சனையில் இழுத்துவிட வேண்டும் என்பதற்காகவா? என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது... கிடைக்கும் சந்தர்ப்பம் அத்தனையையும் ரஜினிகாந்த்தை மையமாக வைத்து களமாடுவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது பாஜக என்பதுதான்!