உத்தரபிரதேசம் போல உத்தம பிரதேசமான தமிழகமும் தாமரையை ஏற்கும்... தமிழிசை நம்பிக்கை!
உத்தரபிரதேசம் போல தமிழகம் உத்தம பிரதேசமாகும் விதமாக தாமரை மலரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பல அரசியல் வியூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஆர். கே நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் இன்று மனு தாக்கல் செய்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் தமிழசை உடனிருந்தார். தண்டையார்பேட்டை தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை கூறியதாவது :
ஆர்கே நகர் இடைத்தேர்தல் களம் ஒரு சோதனைக் களம் என்று நினைத்துக் கொண்டு பலரும் இந்த களத்தில் குதிக்கின்றனர். பாஜகவிற்கு இடைத்தேர்தல் புதிதல்ல எல்லாத் தேர்தல்களையும் எங்கள் கட்சி சந்தித்துள்ளது. பாஜக வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் செய்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். அப்படியில்லை, எங்கள் கட்சியின் தலைமை 5 மாநில தேர்தலுக்கான வேட்பாளரையும் ஒரே நாளில் தான் அறிவித்தார்கள்.
குறைபாடின்றி சந்திக்கிறோம்
நிர்வாக ரீதியான நடைமுறைதானே தவிர பாஜக சார்பில் போட்டியிட 15க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். அதனால் எந்த வித குறைபாடும் இல்லாமல் தேர்தல் களத்தை சந்திக்கிறோம்.
புதிதல்ல
விஷால் எத்தனையோ சுயேச்சை வேட்பாளர்கள் போல அவரும் ஒரு சுயேச்சை வேட்பாளர் தான். பாஜகவிற்கு தேர்தல் களம் புதிதல்ல, பல அரசியல் வியூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
ஊழல் இல்லாத பாஜக
ஆட்சியில் இருக்கும் குறைபாடுகளை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்போம். ஊழலற்ற கட்சி என்று சொல்லக்கூடிய ஒரே தகுதி உள்ள கட்சி என்றால் அது பாஜக தான், யாராக இருந்தாலும் பின்புலத்தில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் தான் தேர்தல் களத்தில் உள்ளனர்.
தனிமைபடுத்தப்படவில்லை
நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்ல, தனித்தன்மையோடு போட்டியிடுகிறோம். எனவே இந்த தன்மை தான் நாட்டில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடைபெறுகிறது.
உ.பி போல தமிழகத்திலும்
அதனால் தான் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து பாஜகவிற்கு மிகப்பெரிய ஆதரவைத் தந்திருக்கிறது. உத்திரப்பிரதேசம் தாமரைக்கு இடம் கொடுத்திருக்கிறது, உத்தமபிரதேசமான தமிழகமும் தாமரைக்கு இடம் கொடுக்கும் என்று தமிழிசை தெரிவித்தார்.