2 கோவில்பட்டி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விடுமுறை.. போலீஸ் விசாரணை
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இரண்டு பள்ளிகளூக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, அங்கு அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் இயங்கி வரும் இரண்டு பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
முதல்கட்ட விசாரணையில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல் வதந்தி என தெரிய வந்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனபோதும், புத்தாண்டு முடிந்து பள்ளிக்கு புத்துணர்ச்சியோடு வந்த மாணவர்கள், வெடிகுண்டு புரளியால் பீதியோடு பள்ளியை விட்டு வெளியேறிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.