புத்தக கண்காட்சியில் அவலம்.. அவசரத்துக்கு 'தண்ணியில்லாமல்' குடும்பம் குடும்பமாக தத்தளித்த கொடுமை!!
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சிக்கான ஏற்பாடுகள் எவ்வளவு படுசொதப்பலாக இருக்க முடியுமோ அவ்வளவு படு மோசமாக இருந்தது பொதுமக்களை எரிச்சலூட்டியது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க 38வது சென்னை புத்தக கண்காட்சி ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இங்கு, 500க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
350 பதிப்பகங்கள்..
350 பதிப்பகங்கள் சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. புதிய தலைப்பில் இந்த ஆண்டு 30 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
வாசகர்களை கவரும் நூல்கள்..
சிறுவர்களையும் படிக்கத் தூண்டும் சுவாரஸ்யமான கதை புத்தகங்கள், காமிக்ஸ், க்ரைம் நாவல்கள், பிரபல எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேண்டிய ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. அதுமட்டுமின்றி, மொழி அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் ஏராளமான ஆங்கில இலக்கணம் சம்பந்தமான சிடிக்கள், இந்திய அரசியல், இதிகாச காவியங்கள் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வாசகர்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன.
திருவிழா
பொங்கலையொட்டி அரசு விடுமுறை நாட்கள் என்பதால், புத்தக காட்சி வளாகமே திருவிழாபோல மக்கள் கூட்டம் அலைமோதியது. சிறுவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள், வயதானோர் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி சென்றனர்.
அடிப்படை வசதி இல்லையே..
ஆனால் இவ்வளவு பிரம்மாண்டமாக செலவு செய்து அமைக்கப்பட்ட புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அடிப்படை வசதி அவ்வளவு மோசம். குறிப்பாக கழிப்பறைக்கு குழந்தைகளை கூட்டிச் சென்ற பெற்றோர் தண்ணீர் இல்லாமல் பரிதவித்த கொடுமையை நேரில் காண முடிந்தது..
கழிப்பறை படுமோசம்
லட்சக்கணக்கான மக்கள் கூடும் புத்தக கண்காட்சியில் 2 குடிநீர் தொட்டிகளில் மட்டும் அவ்வப்போது தண்ணீரை நிரப்புகின்றனர்.. தண்ணீர் காலியான நேரத்தில் கழிப்பறைக்கு குழந்தைகளை கூட்டிச் சென்ற பொதுமக்கள் படும்பாடு அப்பப்பா.. இதற்கான மோதல் காட்சிகளும் கூட சென்னை புத்தக கண்காட்சி வளாகத்தில் அரங்கேறியது..
அடிப்படை வசதி செய்யுங்க..
வேறுவழியே இல்லாமல் புத்தக கண்காட்சி வளாகத்தைவிட்டு வெளியே வந்து ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு சொந்தமான கழிப்பிடங்களைத்தான் புத்தக திருவிழாவுக்கு வந்தவர்கள் பயன்படுத்தவும் நேரிட்டது..
ஊரு உலக நியாயங்கள் பேசி புத்தகம் போடுகிற மகராசன்கள் முதலில் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கப்பா..