கோவையில் உடைந்த தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!
கோவை: கோவையில் பெய்த தென்மேற்கு பருவமழையால் உடைந்த இரு தடுப்பணைகளை, உடனடியாக சீரமைத்து மழை நீரை சேமிக்க உதவ யாராவது முன் வர வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தவிப்பிக்குள்ளாகியுள்ளனர்.
அதனை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்புசெய்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி கோவைப்புதூர், அறிவொளி நகர், பி.கே.புதூர், இடையர்பாளையம், சுந்தாராபுரம், மைல்கள் போன்ற 10க்கும் மேற்பட்டவை புறநகரப் பகுதிகளாக உள்ளன.
உடைந்த தடுப்பணைகள்
இப்பகுதிகளில் பெய்யும் மழைநீரும், செங்குளம் மற்றும் குறிச்சி ஆகிய இரு குளங்களின் உபரிநீரும் பல்வேறு பள்ளங்கள் வழியாக வந்து சேரும் இடம் தான் வயல் வெளிகளுக்கு மத்தியில் ஓடுகின்ற பெரியப்பள்ளம். சுமார் 7 கி.மீ. தொலைவிற்கு ஓடும் இந்த பெரியப்பள்ளத்தின் குறுக்கே மதுக்கரை வட்டம் குரும்பப்பாளையம் பகுதியில் 7 அடி உயரத்தில் இருந்த 2 தடுப்பணைகள் தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்தது.
குடிநீருக்கு அவதிப்படும் நிலை
பல்வேறு முயற்சியில் விவசாயிகளால் இந்த இரு தடுப்பணைகள் அருகிலுள்ள 3 மற்றும் 5 ஏக்கர் பரப்பளவிலான குட்டைகள் மழைக்கு சில நாட்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியின் பாதிப்பிலிருந்து மீளும் வகையில் மழைநீர் ஓடிய நிலையிலும் அதை சேமிக்கு முடியவில்லை என்ற வருத்தத்துடன் இருக்கின்றனர் இப்பகுதி விவசாயிகள். சுமார் 35௦ ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, சோளம், வெண்டைக்காய், தக்காளி போன்ற காய்கறிகள் இந்த பகுதிகளின் பிரதான விவசாயமாக செய்து வருகின்றனர். ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் தற்போது வெறும் 100ஏக்கருக்கும் குறைவாக விவசாயம் மேற்கொண்டு வருவதாக கூறும் விவசாயிகள், சுற்றுப்புற பகுதிகளில் அகல பாதாளத்தில் நிலத்தடி நீரும் சென்றதால் குடிநீருக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
தடுப்பணைகள் சீரமைக்க வேண்டும்
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் வரும் தடுப்பணைகளின் நிலை குறித்து பருவமழை காலத்திற்கு முன்னதாகவே அறிந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம் என்று கூறும் இயற்கை ஆர்வலர்கள், தற்போது உடைப்பு ஏற்பட்டிருக்கும் இரு தடுப்பணைகளை சீரமைக்க ரூ. 30 லட்சத்திற்கும் அதிகமாக தேவைப்படும் நிலையில், தங்களுக்கு ஆண்டுக்கு ரூ.25லட்சம் மட்டுமே நீர்நிலைகள் பராமரிப்பிற்கு அரசு நிதி ஒதுக்குவதாக அலட்சியமாக பொதுப்பணித்துறை கூறுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசு உதவ வேண்டும்
எனவே, தடுப்பணையை தூர்வார உதவ தனியார் பங்களிப்பை நாடி நிற்கும் இந்த விவசாயிகள், அரசும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர். மேலும் உடைந்த இரு தடுப்பணைகளை, உடனடியாக சீரமைத்து மழை நீரை சேமிக்க உதவ வேண்டும் என்றும் அதனை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்புசெய்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.