மழையால் கோவையில் இடிந்து விழுந்த துணிக்கடை.. அதிகாலை என்பதால் உயிரிழப்பு தவிர்ப்பு
கோவை: துணிக்கடை குடோன் இடிந்து விழுந்த சம்பவத்தில் அதிருஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட சம்பவம் கோவையில் நடைபெற்றுள்ளது. கனமழை காரணமாக அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
கோவை பெரியகடை வீதியில் பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மாடியில், துணிக்கடை ஒன்றின் குடோன் இயங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 5.45 மணி அளவில் திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. துணிக்கடை குடோன் இடிந்து விழுந்ததில் கீழே உள்ள பேன்சி ஸ்டோர் பொருட்களும் நாசமானது.
தகவல் அறிந்ததும் பெரிய கடை வீதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கீழ் தளத்தில் உள்ள கட்டிடம் மிகவும் பழமையானதாகும். சமீபத்தில் பெய்த மழையால் இந்த கட்டிட சுவர்கள் சேதமடைந்திருந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தான் இன்று காலை கட்டிடம் இடிந்து விழுந்தது.
பேன்சி ஸ்டோரில், 10 பேர் வேலை பார்க்கின்றனர். எனவே பகல் நேரத்தில் இடிந்து விழுந்திருந்தால் உயிர்சேதம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிருஷ்டவசமாக, அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.
இந்த கட்டிடத்தின் முன்பு இரவு நேரங்களில் சிலர் படுத்து உறங்குவது வழக்கமாம். நேற்று இரவு அவ்வாறு படுத்திருந்தவர்களை அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் கவனித்து அவர்களை விரட்டி உள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த கட்டிடத்தையொட்டி செருப்புகடை ஒன்றும் இயங்கி வருகிறது. துணிக்கடை குடோன் சுவர்கள் இடிந்து விழுந்ததில் செருப்பு கடையும் சேதம் அடைந்தது. மொத்த சேதம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் மிகவும் பழமையானதாகும். இந்த கட்டிடங்களின் கீழ் தளத்தை பலமாக்காமலேயே மாடி கட்டி அவற்றில் அதிக சுமை ஏற்றி விடுகின்றனர்.
இதனால் இங்குள்ள மேலும் சில கட்டிடங்கள் எப்போதும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் இவற்றை கவனித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மேயர் ராஜ்குமார், எம்.எல்.ஏ, சேலஞ்துரை உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர்.