போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.100 கோடி நஷ்டம்.. தற்காலிக ஓட்டுநர்களால் 5 பேர் சாவு!
Recommended Video
சென்னை: பஸ்கள் வேலை நிறுத்தம் தொடங்கிய பிறகு இதுவரை 5 பேர் தற்காலிக பஸ் டிரைவர்கள் ஓட்டிய வாகனத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். அரசுக்கு சுமார் ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன், பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு முதலே தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீரென ஸ்டிரைக்கில் குதித்தனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 60,000 பணியாளர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகம் முழுக்க உள்ள 8 கோட்டங்களில் 15,000 தற்காலிக பணியாளர்களை நியமித்துள்ளது அரசு. சுமார் 75 சதவீதம் அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் தினமும் 65 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பை போக்குவரத்து கழகங்கள் சந்திக்கின்றன.
இந்த ஸ்டிரைக் மூலம் போக்குவரத்து துறைக்கு ரூ.100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வரையிலலான நிலவரப்படி, தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய பஸ்கள் மோதி 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே கடுமையான நஷ்டத்தில் ஓடிக்கொண்டுள்ள போக்குவரத்து கழகங்களுக்கு இந்த நஷ்டம் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
எந்த டிரைவர் இயக்கினாலும் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பை மறுக்க முடியாது என்றபோதிலும், தற்காலிக டிரைவர்களால் விபத்துகள் குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு சம்பவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.