போக்குவரத்துக்கழக ஊழியர் 2-வது நாளாக வேலைநிறுத்தம்! பேருந்துகள் மீது கல்வீச்சு! தொழிலாளர்கள் கைது!
சென்னை: தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் இன்று 2வது நாளாக நீடிக்கிறது. தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த அறிவிப்பை மீறி இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும் பல இடங்களில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஊதிய ஒப்பந்தம், பணி நேரம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று முதல் அவர்கள் திடீரென வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.
இதனால் விடுமுறை நாளான நேற்று தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கியது. சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கிருந்து சென்னை திரும்ப முடியாமல் பேருந்து நிலையங்களில் தவித்தனர்.
தொ.மு.ச, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் காரணமாக 90% பேருந்துகள் இயங்கவில்லை. பெரும்பாலான ஊர்களிலும் இதேநிலை காணப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கத்தினர் கலந்துகொள்ளவில்லை. அந்த தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு மாநிலத்தின் சில இடங்களில் காவல்துறையினரின் உதவியுடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
பல இடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர்.
இன்று காலை முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் பாதியளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பேருந்துகளை இயக்கவிடாமல் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையே பயன்படுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டும் வருகின்றனர்.