உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்வு: மதுக்கடைகளை மூட உத்தரவு
இதே போல், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி, கோவை, நெல்லை மாநகராட்சி மேயர் பதவி, காலியாக இருந்த நகராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பதவிகளில் காலியான இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட அனைத்து பதவிகளுக்கும் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. பா.ஜ.க, கம்யூனிஸ்டு கட்சிகளும் களத்தில் உள்ளன. தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் போட்டியிடவில்லை.
நெல்லை மேயர், புதுக்கோட்டை நகரசபை தலைவர் மற்றும் ஏராளமான உள்ளாட்சி பதவிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர 1486 பேர் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த பத்து நாட்களாகவே தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள், பிரசாரம் செய்து வருகிறார்கள்.
நாளையுடன் ஓய்வு
தற்போது மாநிலம் முழுவதும் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கட்சி தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டு வருகிறார்கள். சூடு பிடித்துள்ள உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது.
வெளியேற உத்தரவு
அதன்பிறகு குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி பகுதிகளுக்கு தொடர்பு இல்லாத அனைவரும் அந்தந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஓட்டுப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
18ஆம் தேதி வாக்குப்பதிவு
உள்ளாட்சி இடைத் தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான இடைத் தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை
மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுக்கடைகளை மூட உத்தரவு
இதனிடையே செப்டம்பர் 16ம் தேதி மாலை 5 மணி முதல் 18ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதே போல், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.