தமிழகம், புதுவையில் பிரசாரம் ஓய்வு! கவுண்ட் டவுன் ஆரம்பம்!!
சென்னை: லோக்சபா தேர்தலின் 6வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் ஓய்வடைந்தது. நாளை மறுநாள் நடைபெறும் வாக்குப் பதிவுக்கான கவுண்ட்டன் தொடங்கியுள்ளது. மேலும் ஆலந்தூர் லோக்சபா சட்டசபை இடைத் தேர்தலுக்கான பிரசாரமும் இன்றுடன் ஓய்ந்து போனது. அத்துடன் முதல் முறையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 16வது லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு 9 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. ஐந்து கட்ட வாக்குப் பதிவும் பொதுவாக அமைதியாக விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.
6வது கட்ட வாக்குப் பதிவு வரும் 24-ந் தேதியன்று நடைபெற உள்ளது. தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் மொத்தம் 117 தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
12 மாநிலங்களில்...
அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் இதில் அடங்கும்.
2071 வேட்பாளர்கள்..
6வது கட்ட வாக்குப் பதிவை 2071 வேட்பாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
பிரசாரம் ஓய்வு
இந்த தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்தது. முன்னதாக இந்த தொகுதிகளில் இன்று பகலில் இறுதி நேர உச்சகட்ட பிரசாரம் நடைபெற்றது.
5 முனை போட்டி
இந்த தேர்தலில் தமிழகம், புதுவையில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, இடது சாரிகள் கட்சிகளிடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் ஆம் ஆத்மியுடன் களமிறங்கியுள்ளது.
845 வேட்பாளர்கள்
தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மொத்தம் 845 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.
விறுவிறு பிரசாரம்
கடந்த ஒரு மாதமாக 40 தொகுதிகளிலும் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மோடி, சோனியா, ராகுல் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழ்நாட்டுக்கு 4 முறை வந்து பிரசாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா, கன்னியாகுமரியில் பிரசாரம் செய்தார். இதையடுத்து பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆகியோரும் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்தனர்.
நடிகர்/ நடிகைகள் பிரசாரம்
அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர்-நடிகைகள் செய்யும் பிரசாரமும் களை கட்டியது.
பிரசாரம் ஓய்வு
வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என்பது விதியாகும். எனவே இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன் பிறகு யாரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது. தொலைக்காட்சி பிரசாரத்துக்கும் தடை அதேபோல் தொலைக்காட்சிகள் மூலமாகவும் பிரசாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் எஸ்.எம்.எஸ், இணையத்தளம் வழியாகவும் ஆதரவு திரட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பிரசாரம் செய்தால்.. பிரசாரம் முடிந்த பிறகு வாக்காளர்களை கவரும் வகையில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்தினால் அது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூத் சிலிப்
தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு பூத்-சிலிப் வழங்கப்பட்டது. வீடு, வீடாக சென்று பூத்-சிலிப் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்கப் பெறாதவர்கள் வாக்குச்சாவடிகளில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் பெயர் ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குப் பதிவுக்கான மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டன. அந்த எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் கட்சி சின்னங்களை பொருத்தும் பணி பெரும்பாலான தொகுதிகளில் முடிவடைந்துவிட்டது.
144 தடை உத்தரவு
தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் தமிழகம், புதுவையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தபப்ட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அடுத்த 36 மணி நேரத்துக்கு அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆலந்தூர் இடைத்தேர்தல்
அதேபோல் ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான பிரசாரமும் இன்றுடன் ஓய்வடைந்துள்ளது. ஆலந்தூரில் திமுக, அதிமுக, தேமுதிக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் களத்தில் உள்ளன. ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.