வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூறியுள்ளதாவது:
வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல்கள் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவுடன் உறுதிமொழிப் பத்திரத்தையும் இணையதளம் மூலம் தாக்கல் செய்யும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
வேட்பாளர்கள் இணையதள மூலமாக உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்ய விரும்பினால் இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதள முகவரி www.eci.nic.in என்ற முகவரியில் ‘‘Online submission of candidate affidavits என்ற தலைப்பை கிளிக்செய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் முத்திரைத்தாளில் அச்சு எடுப்பதற்கான முறையில் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆணையர் அல்லது முதல் வகுப்பு நடுவர் அல்லது நோட்டரி பப்ளிக் முன்னிலையில் உறுதிமொழிப் பத்திரத்தினை அதற்குரிய கட்டணத்துடன் முத்திரைத்தாளில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல்செய்ய வேண்டும்.
சான்றளிக்கப்பட்ட உறுதிமொழிப்பத்திரமானது வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம்" என்று கூறப்பட்டுள்ளது.