மாப்ளைகளா.. மாட்டைப் பிடிங்க.. பைக், கார், தங்கக் காசை அள்ளுங்க.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல!
ஜல்லிக்கட்டில் காளைகளை தழுவினால் எவர்சில்வர் அண்டா, பானை போன்றவை பரிசளிக்கப்படும், இந்த ஆண்டு கார், பைக், தங்ககாசுகள் பரிசளிக்கப்படும் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழு அறிவித்துள்ளது.
மதுரை : ஜல்லிக்கட்டுக்காக புரட்சி நடத்தி சட்டம் இயற்ற வைத்துள்ளனர் இளங்காளைகள். இதோ ஆவலுடன் எதிர்பார்த்த ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற போகிறது.
எத்தனையோ ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் அலங்காநல்லூரில் வாடிவாசலை காளைகள் தாண்டி குதித்தால்தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதாக அர்த்தம்.
பிப்ரவரி 10 ம்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. கேலரி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
காளைகள் தயார்
ஜல்லிக்கட்டுக்காக காளைகளும், மாடு பிடி வீரர்களும் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் தங்க காசு, பீரோ, கட்டில், அண்டா, பானை ஆகியன பரிசாக வழங்குவது வழக்கம் .
காளையை பிடி காரை ஓட்டு
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என விழா குழுவினர் அறிவித்துள்ளனர். இது மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரர்களுக்கு பெண் பரிசு
பண்டைய காலங்களில் மாடுகளை அணைத்து ஏறு தழுவும் வீரர்களுக்கு பெண் தருவார்கள். இப்போது பொற்காசுகள் பரிசாக தரப்படும் என்று அறிவித்துள்ளனர்.
களத்தில் நின்று விளையாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் புல்லட் , டிராக்டர் , பிரிட்ஜ், எல்.இடி, எல்சிடி டி.விக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வீரர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
போட்டியை காண ஆர்வம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்த போட்டியை கான பலர் வெளியூரில் இருந்தும் வெளி நாட்டிலிருந்தும் செல்வது வழக்கம். இதற்காகவே பல ஊர்களைச் சேர்ந்த காளைகளும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும்.
எதிர்பார்ப்பு அதிகரிப்பு
மூன்று ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடையினால் நிறுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டி மாபெரும் புரட்சி போராட்டத்தையடுத்து அரசு சட்டம் இயற்றியது. தடையை தாண்டி இந்த ஆண்டு போட்டி நடைபெற உள்ளதால் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் நாளையும், பிப்ரவரி 9 பாலமேட்டிலும், ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.