தஞ்சை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுபோட்ட 51 நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு
தஞ்சையில் போராடிய நாம் தமிழர் கட்சியினர் 51 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
Recommended Video
தஞ்சை: தஞ்சை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில், தஞ்சையில் வருமான வரி அலுவலகத்திற்குள் புகுந்த நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்த அலுவலர்களை வெளியேற்றிவிட்டு உட்புறம் கதவைப் பூட்டிக்கொண்டனர்.
காவல்துறையினர் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டும் போராட்டக்காரர்கள் வெளியே வர மறுத்துவிட்டனர். நெடுநேரம் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு வெளியே வந்த போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 51 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் மிரட்டுதல், அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைதல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏப்ரல் 20-ம் தேதி வரை 51 பேரையும் சிறையில் அடைக்க தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.