ஜெ. பிரச்சார கூட்டங்களில் மக்கள் பலி: மனித உரிமை ஆணையத்திடம் திமுக, தேமுதிக மனு
சென்னை: ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக்கூட்டங்களில் மக்கள் பலியாவது தொடர்பாக திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் மனித உரிமை ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.
கடந்த வாரம் விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த மக்கள் வெயிலை தாங்க முடியாமல் திணறினர். இதையடுத்து வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் இரண்டு பேர் சுருண்டு விழுந்து பலியாகினர்.

அந்த இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக பலியானதாக ஜெயலலிதா தெரிவித்தார். இந்நிலையில் நேற்று சேலத்தில் ஜெயலலிதா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் 2 பேர் வெயிலின் கொடுமையால் உயிர் இழந்தனர். இந்த 2 பேரும் உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் பலியாவது குறித்து திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது மனித உரிமை மீறல் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டங்களில் மக்கள் தொடர்ந்து பலியாவது தொடர்பாக திமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் மனித உரிமை ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.












Click it and Unblock the Notifications