காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மோடிக்கு கருணாநிதி கடிதம்!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரதமருக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடியிடம் நேரில் வலியுறுத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து கர்நாடக அனைத்துக் கட்சி குழு கூட்டம் அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் பிரதமரை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று தெரிவித்து திரும்பியது. இதன்பிறகு ஜெயலலிதா கடிதம் மூலம் மோடிக்கு மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தினார்.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியும் பிரதமர் நரேந்திரமோடிக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
"வணக்கம். சட்டத்தில் வலியுறுத்தியுள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு நீர்வளத் துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்ற நோக்கத்திற்காக இந்த கடிதத்தை எழுதியுள்ளேன்.
இதுதொடர்பாக, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பல கமிட்டிகளும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டியது அவசியம். இந்த வாரியம்தான், காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின் செயலாக்கத்தை கண்காணிக்கும் அதிகாரம் பெற்றது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சி குழு கூட்டத்தை கூட்டுமாறு தமிழ்நாடு அரசை நான் கேட்டுக்கொண்டேன். அதுபோன்ற கூட்டம் மூலமாகத்தான் தமிழகத்தின் ஒற்றுமையை காண்பிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், தமிழக அரசு எனது கோரிக்கையை ஏற்கவில்லை.
அதிமுக அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த மூன்றாண்டு காலமாக, நீரின்றி குறுவை சாகுபடி நடைபெறவில்லை. குறுவை சாகுபடி பொய்த்ததால் காவிரி டெல்டா பகுதியில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மேலாண்மை வாரியம் அமைக்க தடை ஏதுமில்லை. காவிரி நடுவர்மன்றத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்கப்படாததால் வாரியம் அமைக்க தடை ஏதுமில்லை. எனவே நான் மீண்டும் ஒருமுறை கேட்பதெல்லாம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழக விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்".
இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.